states

img

கட்டுமான சம்மேளனத்தின் உழைக்கும் பெண்கள் அகில இந்திய மாநாடு

நாகர்கோவில், நவ.6- கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐடியு) உழைக்கும் பெண்கள் அகில இந்திய மாநாடு  திங்களன்று கன்னியாகுமரியில் எழுச்சியுடன் துவங்கியது. சிஐடியு மற்றும் கட்டுமான அகில  இந்திய தலைவர் டாக்டர்.கே.ஹேமலதா மாநாட்டை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் சங்க உபக்குழு கன்வீனர் லூர்து ரூபி மாநாட்டு கொடியை ஏற்றினார். சிஐடியு மற்றும் கட்டுமான  இந்திய தலைவர் டாக்டர்.கே.ஹேமலதா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். கட்டுமான தொழிலாளர் சங்க அகில இந்திய உபக்குழு கன்வீனர் ஷுலா அலெக்ஸ் அறிக்கை சமர்ப்பித்தார். கட்டுமான தொழிலாளர் அகில இந்திய பொதுச்செயலாளர் உ.பி.ஜோசப் நிறைவு செய்து பேசினார். 

வரவேற்புக்குழு தலைவர் பி.இந்திரா, மேற்கு வங்க கட்டுமான தொழிலாளர் உபக்குழு கன்வீனர் சோனாலி தாஸ் சர்மா,வரவேற்புக்குழு பொருளாளர் வேலம், வரவேற்புக்குழு செயலாளர் கே.பி பெருமாள், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எ.வி.பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லிமாறோஸ், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமோகன் ஆகியோர் பேசினர்.  மாநாட்டில் 250 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கட்டுமான வேலை இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், சந்திக்கும் பிரச்சனைகள், மற்றும் எதிர்கால கோரிக்கைகள் ஆகியவை குறித்து விவாதித்தனர். 

வேலை இடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்து நிறுத்த வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிர் இடஒதுக்கீடுக்கான மசோதாவை மேலும் தாமதிக்காமல் விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். பத்திரிகை மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். ஊடகவியலாளர்கள் பிரபீர்புர்காயஸ்தா, அமித் சக்ரவர்த்தி உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும். பாலஸ்தீன மக்களை கொன்றுகுவிக்கும் கொடிய போரை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.