states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சாட் ஜிபிடி தோல்வி

புதுதில்லி, மார்ச் 3 - யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் சாட் ஜிபிடி (ChatGPT)  தோல்வியடைந்துவிட்டதாக அனலிட்டிக்ஸ் இந்தியா இதழ்  கூறியுள்ளது. முதல்நிலைத் தேர்வின் முதல் தாளின் (செட் ஏ) 100 கேள்விகளில் 54 கேள்விகளுக்கு மட்டுமே ‘சாட் ஜிபிடி’ சரியாக பதிலளித்தது.  இதன் விளைவாக சாட்ஜிபிடி 87.54 கட்ஆப் அடிப்படையில்  யுபிஎஸ்சி  முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற  முடியவில்லை.  செயற்கை நுண்ணறிவு அமைப்பான சாட் ஜிபிடியில் சந்தேக கேள்விகளை தட்டச்சு செய்தால் உடனே பதில் தரும். அதன் அடிப்படையில் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வின் கேள்விகளை சோதித்து பார்த்த பொழுது தவறான தகவல்களை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார் தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் என்ற வீடியோக்கள் பொய்யானவை: தேஜஸ்வி

பாட்னா, மார்ச் 3- தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வீடியோக்கள் பொய்யானவை என்று பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி கூறியுள்ளார். “பீகாரில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு சென்றதாகவும், தமிழ்நாட்டில் அவர்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்பதைக் காட்டவே இந்த வேலை செய்யப்பட்டுள்ளது; இதுபோன்ற போலியான வதந்திகளை பரப்புவதே பாஜகவின் வேலை” என தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் ஒட்டன்சத்திரத்துடன் நிறுத்தம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 3-  தண்டவாள பராமரிப்பு பணி காரண மாக பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் 4 நாட்களாக  ஒட்டன்சத்திரத்துடன் நிறுத்தப்படுகிறது.  மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட திண்டுக்கல், திருமங்கலம், விருதுநகர், மானாமதுரை, இராமேஸ்வரம், தென்காசி, நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங் களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் மின் வழிப்பாதை பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.  இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரயில்களின் போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதனை தொடர்ந்து, பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, மதுரை வழி யாக திருச்செந்தூர் வரை இயக்கப் படும் ரயில் (வ.எண்.16732) ஒட்டன் சத்திரம் ரயில் நிலையத்துடன் கடந்த 4 நாட்களாக நிறுத்தப்பட்டு வருகிறது. கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து வரும் பயணிகள் ஒட்டன்சத்தி ரத்தில் ரயிலில் இருந்து இறங்கி பேருந்துகள் மூலம் திருச்செந்தூர், மதுரை செல்கிறார்கள். இந்த ரயில் மார்ச்  6 ஆம் தேதி  வரை பாலக்காட்டில் இருந்து ஒட்டன் சத்திரம் வரை மட்டும் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்த னர்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு இடைக்காலத் தடை இல்லை : உயர் நீதிமன்றம்

சென்னை, மார்ச் 3-  கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்  பாண்டியன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர்  நீதிமன்றம், வழக்கு குறித்து இரண்டு வாரங்களில் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.  2022  ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த  ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவான பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனோஜ் பாண்டியன் தரப்பில், கட்சி  நிறுவனரின் கொள்கைகளுக்கு விரோதமாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளதாகவும், கட்சி விதிகளுக்கு விரோதமாக, எந்த விளக்கமும் கேட்காமல் கட்சி யில் இருந்து நீக்கியுள்ளதாகவும் வாதிடப்பட்டது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் காரணமாக, அதிமுக எம்.எல்.ஏ.வாக எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இயலாத சூழல் உருவாகியுள்ளதால், எதிர் தரப்பினரின் விளக்கங்களைக் கேட்காமல், தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சியினர் ஒற்றைத் தலைமையை விரும்பினார்கள் எனக் கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் மனோஜ் பாண்டியன் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, எதிர் மனுதாரர்களின் விளக்கத்தை கேட்காமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் எதிர்மனுதாரர்கள் தரப்பு விளக்கங்களை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த மனு குறித்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை, மார்ச் 17-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்றத்திற்கு  5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்

சென்னை,மார்ச் 3- சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள எஸ்.ஸ்ரீமதி, டி. பரத சக்கரவர்த்தி, ஆர்.ஜெ. விஜயகுமார், முகமது ஷபிக், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இவர்களை நிரந் தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உத்த ரவு பிறப்பித்துள்ளார். இதன்படி ஐந்து பேரும் விரைவில் நிரந்தர நீதிபதி களாக பதவி ஏற்க உள்ளனர்.

பொறுமைக்கும் எல்லை இருக்கிறது:   ஆளுநர் விவகாரம் குறித்து அமைச்சர்

சென்னை,மார்ச் 3- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி யோடு மோதல் போக்குவேண்டாம் என்றுதான் மாநில அரசு நினைக்கிறது என்று சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகு பதி தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார பேரவையின் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, செய்தி யாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “ஆளுநரோடு மோதல் போக்கு வேண்டாம் என்று தான்  நினைக்கிறோம். ஆளுநர் விவகாரத் தில் மற்ற மாநிலத்தில் வரும் தீர்ப்பு கள் தமிழ்நாட்டிற்கு பொருந்தும். பொறு மைக்கும் ஒரு எல்லை உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் விரை வில் கூட உள்ளது. அப்பொழுது முதல் வர் ஆளுநர் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது”என்றார்.

ரூ.1.17 லட்சம் கோடி வணிகவரி வசூல் : அமைச்சர் மூர்த்தி

சென்னை,மார்ச் 3- வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- வணிகவரித்துறையில் எடுக்கப் பட்ட பல்வேறு நடவடிக்கையினால் வசூல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் 28.2.2023 வரை யிலான மொத்த வருவாய் ரூ. 1,17,458.96 கோடியாகும். கடந்த ஆண்டின் இதே நாளில் இத்துறையின் வரு வாய் ரூ. 92,931.57 கோடியாக இருந்தது. இந்த வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் இதே நாளில் 24,527.39 கோடி வருவாயை வணிகவரித்துறை அதிகமாக ஈட்டி யுள்ளது. அதே போன்று பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவின் மூலம் பெறப்படும் வருவாய் நடப்பு ஆண்டில் வரலாற்று சாதனையை எட்டியுள்ளது. நடப்பாண்டில் 28.2.2023 வரை பதிவுத் துறையில் வசூலிக்கப்பட்ட மொத்த  வருவாய் ரூ. 15,684.83 கோடியாகும். கடந்த வருடம் இதே நாளில் வசூ லிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ. 12,161.51 கோடியை விட ரூ. 3,523.32 கோடி அதிகமாக நடப்பு ஆண்டில்  பதிவுத்துறையால் வசூலிக்கப்பட் டுள்ளது.வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள பல்வேறு சீர்தி ருத்த நடவடிக்கைகளினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஆய்வு கூட்டங்களினாலும் இத்துறைகளின் வருவாய் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

பத்திரிகையாளர் கோரிக்கைகளுக்காக  சென்னையில் கருத்தரங்கம்

சென்னை.மார்ச் 3 தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்ன லிஸ்ட்ஸ் மாநில நிர்வாக குழுக் கூட்டம் 25, 26 (சனி ஞாயிறு) ஆகிய இரண்டு தினங்களில் ஆரணியில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு மாநில  தலைவர் பி.எஸ்.டி புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் பி.சண்முகவேலு, பொதுச் செயலாளர்கள் சுரேஷ், கே முத்து பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர் நல வாரி யத்தில் பத்திரிக்கையாளர் சங்க தொழிற்சங்க பிரதிநிதிகளை உறுப்பி னர்களாகச் சேர்க்க வேண்டும். பத்தி ரிக்கையாளர் நல வாரியத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களையும், அதில் உள்ள குறைபாடுகளையும் தமிழ்நாடு முதல்வர், செய்தித் துறை  அமைச்சர் , அதிகாரிகள் ஆகி யோரை சந்தித்து  கோரிக்கை மனு அளிப்பது, பத்திரிக்கையாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கவன ஈர்ப்பு கருத்தரங்கம் நடத்தி  அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, தகுதியுள்ள பத்திரிக்கையாளர் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கிடவேண்டும், பத்திரி கையாளர் நல வாரியத்தில்  தாலுக்கா மற்றும் ஊரகப் பத்திரிக்கையாளர் களையும் இணைக்க வேண்டும். தொலைக்காட்சியில் பணிபுரியும்  பத்திரிகையாளர்களை ஊதியக் குழுவில்  கொண்டுவர ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சட்ட மியற்ற வேண்டும், அவர்களுக்கும் ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் கிடைக்க வழிவகை  செய்திட வேண்டும்  பத்திரிக்கையாளர் அடை யாள அட்டையைப் புதுப்பிக்கும் காலத்தை ஆண்டுக்கு ஒரு முறை என மாற்றவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் இந்தக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

சிதம்பரம், மார்ச் 3- சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழ கத்தில் 2002 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான கல்வியாண்டில் தொலை தூரக் கல்வி வழியில் பயின்று, தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக வருகிற மே 2023 மற்றும் டிசம்பர் 2023 என இரண்டு பரு வங்களில் சிறப்பு தேர்வு நடைபெற உள்ளது. 

தகவல் ஆணையர்கள்:  முதல்வர் ஆலோசனை

சென்னை,மார்ச் 3- தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் யார் என்பதை தேர்வு செய்வ தற்கான ஆலோசனை கூட்டம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தலைமையில் சென்னை தலைமைச் செயல கத்தில் நடைபெற்றது.   தமிழ்நாட்டில் தலைமை தகவல் ஆணையர், நான்கு தகவல் ஆணையர்களின் பதவியிடங்கள் காலியாக உள்ளது. தகவல் ஆணை யர்கள் பதவிக்கு விண்ணப் பித்தவர்களில் தகுதி வாய்ந்தவர்களின் பட்டி யலை அதனை தயார் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதி பதி அக்பர் அலி முதலமைச் சரிடம் வழங்கியுள்ளார். இந்த நிலையில், தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோ சனைக்கூட்டம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடை பெற்றது. இந்த கூட்டத் தில் தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் ஆளுநரின் ஒப்பு தலை பெற்று அரசிதழில் வெளியிடப்படும். தமிழக அரசின் தலைமைச் செய லாளராக உள்ள இறை யன்புவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலை யில் அவரும் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஸ்டில்லோவுக்கு 31 ஆண்டுகள் சிறை

லிமா, மார்ச் 3- வலதுசாரிக் கட்சிகளால் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பெட்ரோ காஸ்டில்லோவுக்கு 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரடித் தேர்தலில் மக்களின் ஆதரவோடு பெட்ரோ காஸ்டில்லோ பெரு நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார். அவரது மக்கள் நலக் கொள்கைகளுக்கு வலதுசாரிகள் பெரும்பான்மையாக இருந்த நாடாளுமன்றம் முட்டுக்கட்டை போட்டு வந்தது. இதனால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு காஸ்டில்லோ பரிந்துரை செய்தார். வலதுசாரிக் கட்சிகள் தங்கள் பெரும்பான்மையைப் பயன்படுத்தி அவரை பதவியிலிருந்து அப்புறப்படுத்தின. அவர் மீது பல வழக்குகள் புனையப்பட்டுள்ளன. தற்போது பாதுகாப்பு வளையம் என்ற பெயரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீதான போலி வழக்குகளைப் பயன்படுத்தி 31 ஆண்டு காலம் வரையிலான சிறைத்தண்டனை அவருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை பெரு21 என்ற நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது. அரசு வழக்கறிஞர் தரப்பில் இத்தகைய கோரிக்கை நீதிபதிகள் முன்னால் வைக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. இந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதி ஜூவான் கார்லோஸ் செக்லி பரிசீலிக்க இருக்கிறார். காஸ்டில்லோ மட்டுமில்லாமல், அவரது பதவிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஜூவான் சில்வா மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த கெய்னர் ஆல்வராடோ ஆகிய இருவர் மீதும் காஸ்டில்லோவுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனநாயகத்தை மீட்கும் வகையிலான மக்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது.