states

துணைவேந்தர்கள் பதவி விலகத் தேவையில்லை பணியை தொடர கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கொச்சி, அக்.25- ஆளுநர் ராஜிநாமா செய்யுமாறு கேட்டுக்கொண்ட 9 துணைவேந்தர்களும் தற்போதைக்கு ராஜிநாமா செய்ய வேண்டியதில்லை என்றும் பணியைத் தொடரலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், காரணம் காட்டும் நோட்டீஸ் மீது வேந்தராக இருக்கும் ஆளுநர் முடிவெடுக்கும் வரை பணியைத் தொடரலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. பதவி விலகக் கோரி துணை வேந்தர்களுக்கு கடிதம் அனுப்பியது தவறு என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற வேந்தரின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் அக்.24 திங்களன்று பரிசீலித்தது. மாலை 4 மணிக்கு சிறப்பு அமர்வை நீதிபதி தேவன் ராமச்சந்திரன் நடத்தினார். 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் திங்களன்று காலை 11.30 மணிக்கு பதவி விலக வேண்டும் என ஞாயிறன்று வேந்தர் ஆரிப் முகம்மது கான் கோரிக்கை விடுத்தார். இதை கேள்விக்கு உட்படுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் பரிசீலிக்கும் எனத் தெரிந்ததும், ஆளுநர் ராஜினாமா கோரிக்கையை மாற்றி, துணைவேந்தர்களுக்குக் காரணம் காட்ட நோட்டீஸ் அனுப்பினார்.