states

img

கூட்டுறவு அமைப்புகளை சீர்குலைக்கும் ஒன்றிய அரசு! - ஆ.கிருஷ்ணமூர்த்தி

‌கூட்டுறவு இயக்கமானது நாட்டு மக்க ளின் அன்றாட வாழ்வில் ஓர் அங்க மாக விளங்குவதுடன் நாட்டு மக்க ளின் நலனுக்கு குறிப்பாக நலிவுற்ற பிரிவினரின் நல்வாழ்விற்கு முக்கியப் பங்காற்றி வரும் அமைப்பாகும். கூட்டுறவு அமைப்புகள் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக திகழ வேண்டும் என்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இடதுசாரிகளின் வலியுறுத்தல் காரணமாக அரசமைப்புச் சட்டத்தில் 97ஆவது திருத்தம் 2011-இல் நிறைவேற்றப்பட்டது

மாநிலப் பட்டியலில்...

கூட்டுறவு சங்கங்கள் விவகாரம் மாநிலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சங்கங்களை அமைப்பது, ஜனநாயக ரீதியில் நிர்வகிப்பது உள்ளிட்டவற்றை ஒன்றிய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என அரசமைப்பு சட்ட 97ஆவது திருத்தம் பிரிவு 43 வலியுறுத்துகிறது. பிரிவு 19(1)சி, சில கட்டுப்பாடுகளுடன் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கிக் கொள்வதற்கான அடிப்படை உரிமையை மக்களுக்கு வழங்குகிறது. கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் விவ காரங்கள், அவர்களின் பதவிக்காலம், மேலாண்மை உள்ளிட்ட விவரங்களை 9 பி பகுதி வழங்குகிறது. கூட்டுறவு சங்கங்கள் மாநிலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் ஒன்றிய அரசு இயற்றிய 97ஆவது அரசமைப்புச் சட்ட திருத்தம் சட்ட விதிகளை மீறி உள்ளதாக குஜராத் உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு பின் குறிப்பிட்ட பகுதிகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

முக்கியத் தீர்ப்பு

இதனை எதிர்த்து ஒன்றிய அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன்,கே.எம். ஜோசப், பி.ஆர் .கவாய் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசா ரித்து 20. 7. 2021 அன்று வழங்கிய தீர்ப்புரையில்,  குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாக பெரும்பான்மை இரு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். கூட்டுறவு சங்கங்களின் விவகாரம் மாநிலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் சங்கங்களை அமைப்பது, நிர்வகிப்பது தொடர்பாக ஒன்றிய அரசு சட்டம் இயற்ற முடியாது எனவும் அரச மைப்புச் சட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 9 பி பகுதியை ரத்து செய்து உத்தரவிட்டனர். அப்பகுதி அரசமைப்புச் சட்டத்தின் அடிப்ப டைக் கட்டமைப்புகளுள் ஒன்றான கூட்டாட்சி தத்துவத்தை மீறும் வகையில் உள்ளதாகும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் 97ஆவது பிரிவில் புகுத்தப்பட்ட மற்ற பிரிவுகள் செல்லுபடியாகும் எனவும் தெரிவித்த னர். 9 பி பகுதி மாநிலங்களின் உரிமையை பறிக்கவில்லை என்று ஒன்றிய அரசு வாதிட்டது.ஆனால் உச்சநீதிமன்றம் இதனை ஏற்கவில்லை. ஒன்றிய அரசு கூட்டுறவுத் துறைக்கு என்று தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு மிக முக்கி யம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மேலும் 2022 அக்டோபரில்  மேற்படி 97 ஆவது திருத்தம் உள்ளூர் அளவில் உள்ள  கூட்டுறவு சங்கங்களுக்கு (LOCAL COOPER ATIVE SOCIETIES)பொருந்தாது என்றும், அவை  பல மாநில கூட்டுறவு சங்கங்களுக்கு(MULTI STATE COOPERATIVE SOCIETIES) மட்டுமே பொருந்தும் என்று மற்றொரு வழக்கில் தீர்ப்ப ளித்தது உச்ச நீதிமன்றம்.  இந்த தீர்ப்பு ஒன்றிய அரசுக்கு பின்னடைவான ஒன்றாகும். ஏனெனில் அது, 2011இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் மாநில கூட்டுறவு சங்கத்தின் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த உள்ளூர் கூட்டுறவு சங்கங்கள் அனைத்திலும் ஊடுருவத் திட்டமிட்டு இருந்தது.

பல-மாநில கூட்டுறவு  சட்டத்(2022)திருத்தம்  

தற்போது புறவாசல் வழியாக பல -மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தை (2002) திருத்திட  2022 பல- மாநில கூட்டுறவு சங்கங்கள்(திருத்தச்) சட்ட முன்வடிவு ஒன்றினை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. தற்பொழுது முன்மொழிந்துள்ள 2022 சட்டத்திருத்தம் மிகவும் ஆபத்தானதாகும். குறிப் பாக இதில் திருத்தப்பட்ட 6-ஆவது பிரிவின்படி எந்த ஒரு கூட்டுறவு சங்கமும் அந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களுக்கு குறையாமல் ஆஜராகி பல மாநில கூட்டுறவு சங்கத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதாக தீர்மானம் கொண்டு வந்து வாக்களித்து நிறைவேற்றினால் தன்னை இணைத்துக் கொள்ள முடியும். திருத்தப்பட்ட 13- ஆவது பிரிவின்படி பல மாநில கூட்டுறவு சங்கங்கள் பங்குகள் எதையும் ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் எடுத்துக் கொள்ள முடியாது. திருத்தப்பட்ட 17- ஈவது பிரிவின்படி ஒன்றிய அரசாங்கத்தால் ஒரு மத்திய தேர்தல் ஆணையம் (Central Election Authority) நியமனம் செய்வ தற்கும், திருத்தப்பட்ட 45-ஆவது பிரிவின் படி ஒன்றிய அரசாங்கம் இயக்குனர் குழுவை (Board of Directors)புறக்கணித்து ஒரு நிர்வாகஸ்த ரை(Administrator) நியமிக்கவும் முடியும். மேலும் கூட்டுறவு மறுவாழ்வு ,புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதி நிறுவுதல்,ஒரே தணிக்கை, புகார் நிவர்த்தி பிரிவை புகுத்தி, பிராந்திய அதிகார வரம்புடன்  கூட்டுறவு குறை தீர்ப்பாளரை நியமனம் செய்வது போன்ற ஷரத்துக்களும் இணைக்கப்பட்டுள்ளன.

ஒன்றிய அரசின் முயற்சியை தடுத்திட...

இந்த திருத்தங்கள் அனைத்தும் மாநிலங்க ளில் உள்ள கூட்டுறவு சட்டங்களை பலவீனப்படுத் தவும், நிதிஆதாரங்களை மடைமாற்றம் செய்ய வும் மேற்கொள்ளப்படுகிற வேலையே தவிர வேறு அல்ல.  பலவீனப்பட்டுக்கொண்டிருக்கும்  பல -மாநில கூட்டுறவு சங்கங்களுக்குள் மீண்டும் நிதி ஆதாரத்தை செலுத்தி அவற்றை மேம்படுத்துவது என்ற பெயரிலான ஒரு திட்டமும் அவர்களிடம் உள்ளது. இதுகூட்டுறவு அமைப்புகளை மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து கைப்பற்றி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஏற்பாடு ஆகும்.  

தமிழகத்தில்  கூட்டுறவு தேர்தல்   

அரசியலமைப்பு 97ஆவது திருத்தச்சட்டம் 2011 -இன்படி தமிழ்நாட்டில் கூட்டுறவு தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டும், 2018-ஆம் ஆண்டும் தேர்தல் நடை பெற்றுள்ளது. 2018இல் நான்கு கட்டமாக 18244 சங்கங்களுக்கு  தேர்தல் நடத்தப்பட்டு 1, 88,400 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு  செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகங்க ளின் பதவிக்காலம் முடிவுறவுள்ள நிலையில்  2023  ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டுறவு இயக்கத்தினைப் பொறுத்தவரை தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கின் றது. இந்தியாவின் முதல் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டது தமிழ்நாட்டில் தான். அத்த கைய கூட்டுறவு அமைப்புகளை பாதுகாக்க,  கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக- மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசின்  சட்டத் திருத்தங்களுக்கு எதிராக எதிர்வரும் கூட்டு றவு தேர்தலை எதிர் கொள்வோம்.

கட்டுரையாளர் : ஒருங்கிணைப்பாளர்.   “கூட்டுறவை பாதுகாப்போம்”இயக்கம்.