states

கவிஞர் தணிகைச்செல்வன் மறைவுக்கு தமுஎகச அஞ்சலி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை 1975 ஆம் ஆண்டு தொடங்கிய  முன்னோடிகளில் ஒருவரான தோழர் தணிகைச் செல்வனின் மறைவுச் செய்தி கேட்டு தமுஎகச அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறது. அவருக்கு தமுஎகச தனது அஞ்சலியையும் வீர வணக்கத்தையும் உரித்தாக்குகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறது என தலைவர் மதுக்கூர் இராமலிங்கம்,  பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர். “ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் 1958ஆம் ஆண்டில் உறுப்பினராகச் சேர்ந்த தணிகைச் செல்வன், 1964இல் மார்க்சிஸ்ட் கட்சி உதயமான போது அதில் தன்னை இணைத்துக்கொண்டார். மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் செங்கல்பட்டு மாவட்டப் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்டார். செம்மலர் இதழின் எழுத்தாளர்கள் 1975இல் கூடி தமுஎச அமைப்பை உருவாக்க முடிவெடுத்த முதல் கூட்டத்தில் பங்குகொண்டார். தமுஎசவின் முதல் மாநில மாநாட்டில் கொள்கை அறிக்கையை உருவாக்குவதிலும் மாநாட்டை நடத்திச் செல்வதிலும் முக்கியப் பங்காற்றினார். முதல் மாநில மாநாட்டில் மாநிலச் செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அவசரநிலைக் காலத்தில் அவர் எழுதி வாசித்த “தீப்பொறியே கிளம்பி வா” என்கிற கவிதை ஆயிரமாயிரமாக உழைக்கும் மக்களை ஆவேசமூட்டிப் போராடத் தூண்டியது. தணிகைச்செல்வன் கவிதைகள், சமூகசேவகி சேரிக்கு வந்தாள் உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் 1970களில் வெளியாகிக் கவனம் பெற்றன. கிழக்கு முதல் கிழக்கு வரை, இலக்கும் இலக்கியமும் போன்ற கட்டுரைத் தொகுப்புகளும் இவரது பங்களிப்பாகும். கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் செம்மலரில் ஆர்வத்துடன் எழுதிவந்தார்.   தோழர் தணிகைச்செல்வன், மூப்பினால் 29.10.2024 அன்று காலமாகிவிட்டாலும் அரசியல் கூர்மையும் அறச்சீற்றமும் கொண்ட தனது கவிதைகளால் உழைக்கும் வர்க்கத்திற்கு என்றென்றும் உதவேகமளிப்பார்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.