எங்களிடம் ஏதாவது சிறப்புகள் இருக்கிறதென்றால் அதற்கு பிரதானமான காரணம் தோழர்கள் எஸ்.ஏ.பி.யும், எம்.என்.எஸ்.சும் தான். இரண்டு மலைகளுக்கு நடுவே வாழ்ந்தோம், வளர்ந்தோம்! 90களின் மத்தியில் தோழர் எஸ்.ஏ.பி தீக்கதிர் பணிகளுக்காக மதுரை சென்ற பிறகு அந்த இடத்தையும் எம்.என்.எஸ் இட்டு நிரப்பினார். எல்லோருக்கும் ஒரு முன்மாதிரி இருந்தால் நல்லது. எம்.என்.எஸ் ஒரு மிகச்சிறந்த முன் மாதிரி. எளிமையான உடை, எளிதில் நெருங்கும் தோழமை. கபடமற்ற சிரிப்பு, நிஜமான நேசப்பார்வை, அதிர்ந்து பேசாத அரவணைப்பு என்பதெல்லாம் அவரின் தனித்த இயல்புகள். திட்டமிடலுக்கும், செயல்பாட்டுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி குறைந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு செயலின் ஐம்பது சதவிகித வெற்றி சரியான திட்டமிடலில் இருக்கிறது. தோழர் எம்.என்.எஸ் திட்டமிடலுக்கு எடுத்துக்கொள்கிற அக்கறை தனி அழகானது. அளவெடுத்து வெட்டப்பட்ட ஒரே அளவான காகித துண்டுகளில் ஒரே அளவில் சீரான இடைவெளியில் எழுதி வைத்திருப்பார். பெரும்பாலும் அடித்தல் இருக்காது. அடிக்க வேண்டிய தேவை எழுந்தால் ஒவ்வொரு எழுத்தின் மீதும் சிறிய கோடுகள் போட்டு அடிப்பார். அது காகிதத்தின் அழகைக் பாதிக்காதிருக்கும்.
வேலை அறிக்கை விவாதிக்கிற கூட்டங்கள் என்றாலோ, பெரியதொரு பணியைத் திட்டமிடுகிற கூட்டம் என்றாலோ இரவு பல மணி நேரம் விழித்து எழுதிக் கொண்டிருப்பார். பல நேரங்களில் விடிந்து விடும். அந்நேரங்களில் மட்டும் வெற்றிலை போட்டுக்கொள்வார். இடையில் எழுந்து மெலிதாக ஒரு ராகத்தை ஹம்மிங் செய்து கொண்டே நடந்து கொள்வார். அந்நேரம் எதிர்ப்படுகிறவர்களைப் பார்த்து, ஹே... என்னப்பா என சத்தமாக சிரித்துக் கொள்வார். அவர் நேர்த்தியாக வயலின் இசைப்பவர் என்பது பலருக்கும் தெரியாத ஒரு செய்தி. நன்கு திட்டமிடப்பட்ட வார்த்தைகள் எழுத்தில் கைகூடுவது சாத்தியம் தான். ஆனால் பேச்சிலும் அதைக் கடைப்பிடித்தவர் தோழர் எம்.என்.எஸ். தேவையற்ற ஒரு சொல்லையும் அவர் பேச்சில் காண முடியாது. பண்பட்ட தமிழ்ச் சொற்களையே பயன்படுத்துவார். இது எல்லோருக்கும் வசப்படக் கூடியதே.ஆனால் அதற்கு எம்.என்.எஸ் போல் படிக்க வேண்டும். அவர் ஒரு தீவர வாசிப்பாளர் என்பதோடு சில குறிப்பிட்ட நூல்களை நூற்றுக்கணக்கில் தரு வித்து புத்தக விற்பனையை இயக்கமாக மாற்றிவிடுவார். பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ்.தனுஷ்கோடி (என்.இராம கிருஷ்ணன்), மூடநம்பிக்கையில் இருந்து விடுதலை(பேரா.அருணன்), தத்துவ தரிசனங்கள் (கே.வரதராசன்)போன்ற நூல்கள் அவரால் இயக்கமாக்கப்பட்ட நூல்களில் சில.
கம்யூனிஸ்ட் இயக்கம் மக்களுக்கான இயக்கமாக இருக்க வேண்டும் எனில் அது மக்களால் நடத்தப்படும் இயக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் முதன்மைப் பொறுப்பு வகித்த இடங்களில் அதனையே அமைப்பின் இயங்கு விதியாகவும் மாற்றிக் காட்டினார். அதன் காரணமாகவே கட்சி தனது நிதி ஆதாரத்திற்கு வெகுஜன நிதி திரட்டலையே சார்ந்து இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.இதனை வெகு சிரமப்பட்டு தோழர்களின் உணர்வாக மாற்றினார். இலட்சக்கணக்கான துண்டறிக்கைகள், ஒரே அளவிலான தண்ணீர் நிற வாளிகள் (உண்டியல்கள்), சட்டையில் குத்திக்கொள்ளும் அட்டைகள் தயார் செய்து ஒவ்வொரு பகுதிக்கும் வழங்கப்படும். மாவட்ட செயலாளர் முதல் தலைவர்கள் அனைவரும் நேரடியாக பகுதிகளுக்கு பொறுப்பேற்று வெகுஜன வசூல் இயக்கத்தை நிறைவேற்றி முடிப்பது என்பதும் விருதுநகர் மாவட்டத்திலும் இன்று வேறு சில மாவட்டங்களிலும் பழக்கமான ஒன்றாகி இருப்பதற்கு தோழர் எம்.என்.எஸ் அவர்களின் பிடிவாதமான முயற்சியே காரணம். நிச்சயமாக இது அவரது கொடை தான்.
அதே போல் பட்டாசு - தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் லட்சக்கணக் கான பாட்டாளிகளைத் திரட்டவும் பிரத்தியேகமான முயற்சிகளைமேற்கொண்டார். வெகுஜன அமைப்புகளைப் போலவே வீடுவீடாக பட்டாசுத் தொழிலாளர்களை உறுப்பினராக சேர்க்கும் இயக்கத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அவரது சிறப்புகளுக்கு மகுடம் சேர்ப்பது பெண்ணுரிமை, தலித் விடுதலை குறித்த அவரது பார்வையும், அணுகுமுறையும். சின்னக்காமன்பட்டி, வெள்ளையாபுரம், சந்திரகிரிபுரம் ஆகிய கோவில் நுழைவுப் போராட்டங்கள் அவர் பதித்த தடங்கள். தலித் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார்.பெண் ஊழியர்களையும், இளைஞர்களையும் தலைவராக்குவதில் தனித்த கவனம் செலுத்துவார். தலித்துகள் என்றால் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உயிர் செயல்பாட்டிலும், விவாதங்களிலும் இருக்கிறது. எதிரும், புதிருமான விவாதங்களை உட்செறித்து, பதிலுரையில் கட்சி அணிகளுக்கு கற்பிக்கிற தோழர்.எம்.என்.எஸ் இப்பொழுதும் எங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.