சென்னை, நவ.8- தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.171.16 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் விடுதிக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து - கருணை அடிப்படையில் 49 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நவம்பர் 8 அன்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , 29 மாவட்டங்களில், 141 அரசுப் பள்ளிகளில் 171.16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 754 புதிய வகுப்பறைக் கட்டடங்கள். 17 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். கருணை அடிப்படையில் பணி பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 49 நபர்களுக்கு கருணை அடிப்படையில் 43 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 6 தட்டச்சர்கள் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு,க. பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சோ.மதுமதி, பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.