சென்னை, செப்.8- ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோயில்களின் சொத்துக்கள் விவரம் அடங்கிய 2ஆவது புத்தகத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னையில் வெள்ளியன்று (செப்.8) வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 7.5.2021 முதல் 31.3.2022 வரை, ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப் பட்ட 167 கோவில்களின் ரூ.2,566.94 கோடி மதிப்பிலான சொத்துக்கள் குறித்த விவரங்களை தொகுத்து, வெளிப்படைத் தன்மையுடன் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முதல் புத்தகம் 17.5.2022 அன்று வெளியிட்டோம். அதனை தொடர்ந்து, 1.4.2022 முதல் 31.3.2023 வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துக்கள் விவரம், தனிநபர் பெயரில், கணினி சிட்டாவில் தவறுதலாக பதிவான பட்டா மாறுதல்கள் சரி செய்து கோவில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யப்பட்ட விவரம் ஆகியவற்றை உள்ளடக்கிய 2ஆவது புத்தகத்தை தற்போது வெளியிட்டிருக்கிறோம். இப்புத்தகத்தில் 1.4.2022 முதல் 31.3.2023 வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 330 கோயில்களுக்குச் சொந்தமான ரூ.1,692.29 கோடி மதிப்பிலான 3386.06 ஏக்கர் நிலம், மனை, கட்டிடம் மற்றும் குளம் விவரங்கள் அடங்கியுள்ளது. அதேபோல், நிலவுடமை பதிவு மேம்பாட்டு திட்ட நடவடிக்கையின் போது தனி நபர் பெயரில் தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட நிலத்திற்கு மீண்டும் பட்டா பெற்ற 145 கோயில்களுக்குச் சொந்தமான 801.63 ஏக்கர் நிலங்கள் விவரம், கணினி சிட்டாவில் பதிவான தவறுகளை சரி செய்து 180 கோவில்களுக்கு சொந்தமான 1,434.43 ஏக்கர் நிலங்களுக்கு கோவில் பெய ரில் பட்டா பெற்ற விவரங்களையும் தொகுத்து கொடுத்திருக்கிறோம்.
நவீன தொழில்நுட்ப கருவியான டி.ஜி.பி.எஸ். மூலம் 74514.48 ஏக்கர் கோயில் நிலங்களில் அளவீடு செய்யப்பட்ட விவரம், அவற்றின் புகைப்படங்கள், அது குறித்து நாளிதழ்களில் வெளிவந்த செய்தி கள் அனைத்தையும் தொகுத்து அளிக்கப் பட்டுள்ளன. இந்நூல்கள் எதிர்காலத்தில் கோவில்களின் சொத்துகளை பாதுகாக்க அடிப்படை ஆதாரமாக விளங்கும். கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கும் பணிகளும், தனிநபர் பெயரிலும், கணினி சிட்டாவிலும் தவறுதலாக பதிவான பட்டா மாறுதல்கள் சரி செய்து கோவில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யும் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்தமாக, கடந்த 7.5.2021 முதல் 7.9.2023 வரை 653 கோவில்களுக்கு சொந்தமான ரூ.5,171 கோடி மதிப்பீட்டிலான 5,721.19 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. மேலும், நவீன தொழில்நுட்ப கருவியான டி.ஜி.பி.எஸ். ரோவர் மூலம் 1,48,956.20 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து பாதுகாக்கப் பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.