தூத்துக்குடி, டிச. 21 - அதிகனமழையால் மிகக்கடுமை யான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட வெள்ள நிலவரங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர், நிவாரண உதவிகளையும் வழங்கினார். மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணி களை விரைந்து மேற்கொள்ளுமாறும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
100 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வெள்ளப் பாதிப்பு
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென் காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள், டிசம்பர் 17, 18 தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக, 1923ஆம் ஆண்டுக்குப் பிறகு 100 ஆண்டு களில் இல்லாத வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புகளை சந்தித்துள்ளன.
95 செ.மீ., அளவிற்கு கொட்டித்தீர்த்த கனமழையால் ஆயிரக்கணக்கான குடி யிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கி யிருப்பதுடன், குடிசைகள் பல இடிந்தும் வீட்டு உபயோகப் பொருட்கள், வாக னங்கள், கால்நடைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளன. பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப் பட்டிருந்த நெல், கம்பு, பாசிப்பயிர், வாழைகள் முற்றாக அழிந்துள்ளன. சுமார் 20 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடனடியாக களமிறக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள்
முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், பி. மூர்த்தி, ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் பி. கீதா ஜீவன், மனோ. தங்கராஜ் உள்ளி ட்ட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சுமார் 20-க்கும் மேற்பட்ட துறைச் செயலாளர்கள் மட்டத்திலான ஐஏஎஸ் அதிகாரிகள், தேசிய மற்றும் மாநில மீட்புப் படையினர் மற்றும் தன்னார்வல ர்கள் உடனடியாக களமிறக்கப்பட்டு, அவர்கள் 4 நாட்களாக மீட்புப் பணி களை மேற்கொண்டு வருகின்றனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர். தொடர்ந்து நிவாரண உதவி களையும் வழங்கி வருகின்றனர்.
நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில், ஏற்கெனவே அறி வித்தபடி, அதிகனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களு க்கு நேரில் சென்று அங்கு மேற் கொள்ளப்பட்டுள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின், வியாழனன்று (21.12.2023) காலை தூத்துக்குடி வந்தார்.
முதலாவதாக, மறவன் மடம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து வெள்ள சேத விவரங்களை யும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதே மறவன் மடம் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
செயிண்ட் மேரிஸ் பள்ளி முகாமில் நிவாரண உதவி
டிசம்பர் 17 அன்று அதிகனமழை பெய்யத் தொடங்கியவுடன், டிசம்பர் 18 அன்று முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மில்லர்புரம், பிரையண்ட் நகர், அண்ணா நகர், டீச்சர்ஸ் காலனி, ராஜீவ் நகர், சிலோன் காலனி ஆகிய பகுதி களைச் சேர்ந்த சுமார் 600 நபர்கள் செயிண்ட் மேரிஸ் பள்ளியில் உள்ள நிவா ரண மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளை உணவும் மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் களும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், அந்நிவாரண மையத்தில் நடத்தப் படும் மருத்துவ முகாமில் காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு போன்ற வற்றிற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
முதல்வர் ஸ்டாலின், செயிண்ட் மேரிஸ் பள்ளியில் உள்ள நிவாரண மையத்திற்கு சென்று, அங்கு தங்க வைக்கப் பட்டுள்ள மக்களிடம் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரிசி. வேஷ்டி, சேலை, போர்வை பாய், பிஸ்கட் மற்றும் ரொட்டி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களை வழங்கினார்.
எட்டையபுரம், குறிஞ்சி நகரில் வெள்ளத்தை வெளியேற்ற உத்தரவு
அதனைத் தொடர்ந்து எட்டையபுரம் 3-ஆவது கேட் மேம்பாலத்திலிருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைப் பார்வை யிட்டு, வெள்ள நீரை அகற்றிட துரித நட வடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், குறிஞ்சி நகர் போல்பேட்டை யில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் பாதிப்புகளின் விவ ரங்கள் குறித்து கேட்டறிந்து, சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணியினை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, சமூகநலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச் செய லர் முனைவர் தா. கார்த்திகேயன், வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பி. ஜோதி நிர்மலாசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி. லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் மற்றும் அரசு உயர் அலு வலர்கள் உடனிருந்தனர்.
ரூ. 2000 கோடி வழங்க பிரதமரிடம் வலியுறுத்தல்
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை, டிசம்பர் 19 அன்று புதுதில்லி யில் நேரில் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்பு களை விளக்கி, இதனை தேசிய பேரிட ராக அறிவிக்க வேண்டும் என்றும், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடி ரூபாயை அவசர நிவாரண நிதியாக வாழ்வா தார உதவிக்காகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி. கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காகவும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரூ. 6 ஆயிரம் நிவாரணம் : முதல்வர் அறிவிப்பு!
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பை ஆய்வுசெய்த பின், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், நெல்லை, தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார். அதேபோல பாதிக்கப்பட்ட விவசாய நிலத்திற்கு ஹெக்டேருக்கு ரூ. 17 ஆயிரமும், குடிசை வீடுகளுக்கு ரூ. 10 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும். தென்காசி, கன்னியாகுமரியில் பாதிப்புகளின் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.