states

கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்கீட்டில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சம்!

மும்பை, அக். 14 -  தங்களுக்கு கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டுள்ளதாக, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள் ளார். இதுகுறித்து உத்தவ் தாக்கரே தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.  அந்தக் கடிதத்தில், “கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளது. கட்சியின் பெயர், சின்னம் குறித்து நாங்கள் தேர்வு செய்து அனுப்பிய பரிந்துரை பட்டியலை, ஷிண்டே தரப்பினர் பரிந்துரை பட்டியல் அளிப்பதற்கு முன்பே, ஆணை யத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டு விட்டனர்.

எங்கள் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றிருந்தவற்றைப் பார்த்து, ‘காப்பி’ அடித்து, அதே விபரங்களை ஷிண்டே தரப்பினரும் தங்கள் பரிந்துரை பட்டியலில் தெரிவித்தனர். இதற்குப் பின்னர்தான், எங்கள் பரிந்துரை பட்டியல், ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து நீக்கப் பட்டது. ஆணையத்தின் இந்த ஒரு தலைப்பட்சமான செயல்பாடுகளை ஏற்க முடியாது” என்று கூறப் பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியை உடைத்த ஏக்நாத் ஷிண்டே, அதிருப்தி சிவசேனா எம்எல்ஏ-க்கள் மற்றும் பாஜக ஆதரவுடன் மகாராஷ்டிர முதல்வர் பதவியையும் கைப்பற்றினார். இதன் பின்னர் சிவசேனா கட்சி மற்றும் தேர்தல் சின்னத்திற்கும் அவர் உரிமை  கோரினார்.  இந்த விவகாரத்தில், சிவசேனா  கட்சிப் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம், நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அந்தேரி கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்காக தற்காலிகமாக புதிய தேர்தல் சின்னங்களை ஒதுக்கியது. உத்தவ் தாக்கரேவுக்கு “தீபச் சுடர்” சின்னமும், “சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே” என்ற கட்சி பெயரும், ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு பாலாசாகேப் “சிவசேனா” என்ற கட்சிப் பெயரும், ‘கேடயத்துடன் கூடிய இரண்டு வாள்’ சின்னமும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையிலேயே, கட்சிப் பெயர் - சின்னம் ஒதுக்கீட்டில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.