சென்னை, அக்.29- கல்வி நிலையங்களை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக மாற்ற தமிழக ஆளுநர் ரவி முயல்வதாக இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் கோ.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஒன்றிணைந்து ‘காசி தமிழ்ச் சங்கமம்’’ எனும் ஓர் புதிய பண்பாட்டுப் பரிமாற்ற முறைக்கான துவக்க நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் வெள்ளிக்கிழமை (அக்.28) நடைபெற்றது. இதைத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி துவக்கி வைத்தார் ‘ஒரே நாடு உன்னத நாடு என்கிற ஒன்றிய அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இந்த முன்னெடுப்பு நடக்கவிருப்பதாகக் கூறினார். தமிழ்நாட்டின் உணவு, உடை, கலை இலக்கியம், பண்பாடு குறித்தானவற்றை ஒரு மாத காலம் வாரணாசியில் கண்காட்சியாக நடத்துவோம் என்று கூறியுள்ளார்கள். இந்த திட்டத்தைப் பற்றி ஒன்றிய அரசாங்கத்தின் வலைத்தளத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த மாதிரியான வடிவத்தில் இந்த நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையெல்லாம் அந்த மாநில அரசாங்கத்திற்கும், யூனியன் பிரதேச அரசாங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்படும். அவர்களே அதை முடிவு செய்து அதை முன்னெடுப்பார்கள் என்று கூறியிருந்தது. ஆனால் இந்த திட்டத்தை ஆர்.என்.ரவி பாஜகவினுடைய நிகழ்வாகத் தமிழகத்தில் கொண்டு செல்லப்பட்டது.
ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் காமகோடி பேசுகையில், தமிழ் இலக்கியத்தில் அகண்ட பாரதம் பற்றிய தரவுகள் இருப்பதாகவும் அதுகுறித்து பேசுவோம் என்றும் கூறியதிலிருந்தே இவர்களது காவி சாயம் வெளுத்துவிட்டது. ஒட்டுமொத்தமாக 2500 நபர்களைக் காசி, அயோத்திக்கு அழைத்துச்செல்ல உள்ளதாகச் சென்னை ஐஐடியின் இயக்குநர் கூறினார். இத்தனைக்குமான பணம் எங்கிருந்து வரப்போகிறது? எந்த அடிப்படையில் அந்த 2500 பேரைத் தேர்வு செய்யப் போகிறார்கள்? எந்த அடிப்படையில் காசி அயோத்தி வாரணாசி போன்ற ஊர்களைத் தேர்வு செய்தார்கள்? இந்த நிகழ்விற்குத் தமிழக அரசாங்கத்தின் ஒப்புதல் இருக்கிறதா ? அப்படி ஒப்புதல் இருந்தால் ஏன் இதைக் குறுகிய நிகழ்வாக நடத்த வேண்டும்? இரண்டு மாநிலங்களுக்கு இடையான பண்பாட்டைப் பற்றி இந்தியாவைக் குறித்து மேலும் தெரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பை ஏன் பாஜகவைச் சார்ந்த ஆட்களை வைத்து மட்டும் நடத்த வேண்டும்? முக்கியமாக இந்தியக் கலாச்சாரம் பண்பாடு என்பது ஒரு மதத்தைச் சார்ந்ததல்ல. இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரையில் கூறப்பட்ட மதச்சார்பின்மையை முற்றிலுமாக காலில் போட்டு மிதிக்கும் ஒரு திட்டத்தைத் தமிழக ஆளுநர் துவக்கி வைத்துள்ளார். இதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது உடனடியாக இவ்விதமான போக்குகளை ஆளுநர் கைவிட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.