பெங்களூரு, செப். 2 - மாணவியர்க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், 64 வயது கர்நாடக மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு கைது செய்யப்பட்டார். அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், திடீர் நெஞ்சுவலி காரணமாக தற்போது சித்ரதுர்கா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள முருக ராஜேந்திர மடத்தின் மடாதி பதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு ஆவார். இவர் நடத்தி வரும் மடத்தின் பள்ளியில் படித்து வரும் இரு மாணவிகள் சிவமூர்த்தி முருக சரணரு மீது கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி பாலியல் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் சிவ மூர்த்தி முருக சரணரு, மடத்தின் வார்டன் ரஷ்மி, பசவதித்தியா, பரமசிவன், கங்காதரைய்யா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தலித் என்பதால், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், வியாழனன்று இரவு 10 மணி அளவில் முருக ராஜேந்திர மடத்திற்குச் சென்ற போலீசார், மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணருவை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, முருக சரணருவை, 14 நாட்கள் நீதிமன்றக் காவ லில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறவே, போலீசார் அவரை சித்ரதுர்கா மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு கர்நாடகாவில் பெரும்பான்மை சமூகமான லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த மடாதிபதி என்பதாலும், அவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு நெருக்கமான சாமியார் என்பதாலும் இந்த வழக்கு விசாரணை நியாயமாக நடை பெறாது எனவும் வழக்கை வேறு மாநி லத்துக்கு மாற்ற வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் கூறியுள்ளனர். அதற்கேற்ப, “தவறான வழக்கில் சரணரு சிக்கியிருக்கிறார்” என்று இந்த விவகாரத்தில், மடாதிபதி முருக சரணரு வுக்கு பாஜக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா பகிரங்கமாகவே தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.