states

மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம்

சென்னை,நவ.19- மாணவி பிரியா மரண வழக்கில் மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்து ள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கால்பந்து மாணவி பிரியாவின் மரணம் தொடர்பாக சங்கம் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. முதல்வரும், தமிழக அரசும் இறந்த குடும்பத்தாருக்கு வழங்கிய ஆறுதலையும் உதவி  தொகைக்கும் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

அதே சமயம் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் படி மருத்துவ சிகிச்சையின் போது ஏற்படும் இறப்பின் போது சம்மந்தப்பட்ட துறையின் மூத்த ஸ்பெஷலிஸ்ட் கருத்தை காவல்துறை பெற வேண்டும். அவ்வாறு மூத்த ஸ்பெஷலிஸ்ட் அந்த மரணத்தில் மருத்துவ சிகிச்சையின் போது கடும் கவனக்குறைவு இருக்கிறது என்று கூறினால் மட்டுமே காவல்துறை 304 ஏ பிரிவில் வழக்கு தொடர வேண்டும். அந்த பிரிவின்கீழ் வழக்கு தொடர்ந்தாலும் மருத்துவர்களை கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. தற்போது நடந்த மரணத்தில் கிரிமினல் கவனக்குறைவு இருப்பதாக சிறப்பு மருத்துவர் குழு அறிக்கை கொடுக்கவில்லை. சிவில் கவனக்குறைவு இருப்பதாகவே அறிக்கை அளித்து இருக்கிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் மீறி தமிழக காவல்துறை குற்றவியல் வழக்கில்  மருத்துவர்களை சேர்த்து தனிப்படை அமைத்து தேடி வருவதாக செய்திகள் வருகிறது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாமல் மருத்துவர்களை கொலை குற்றவாளி போல முன்ஜாமீன் மறுத்து உடனடியாக சரணடைய கூறியிருப்பது அனைத்து மருத்துவர்களையும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது. இந்த நிகழ்வில் சிவில் கவன குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே மருத்துவர்கள் மீது எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. மேலும் மருத்துவரின் பெயர்களையோ, புகைப்படங்களையோ ஊடகத்தில் கிரிமினல் குற்றவாளிகளை போல வெளியிட வேண்டாம் என்றும் சங்கம் வேண்டுகோள் வைக்கிறது. எனவே மருத்துவர் மீது பதியப்பட்ட 304 ஏ பிரிவு மாற்றப்பட வேண்டும். அதையும் மீறி மருத்துவர் கைது செய்யப்பட்டால் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும். மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல்பட்டவர்கள் தான். கவனக்குறைவினால் உயிர் சேதம் ஏற்பட்டது. சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.