தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் “சமதள ஆடு களம்” வேண்டுமென்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருப்பது ஏன்? ஜூன் 20, 2022 அன்றைய இந்து பிசினஸ் லைன் செய்தி தரும் தகவல் இது.
ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடாபோன் ஆகிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒரு கடிதத்தை அரசாங்கம், டெலிகாம் அத்தாரிட்டி ஆப் இந்தியா ஆகியவற்றுக்கு எழுதியுள்ளன. இவர்களின் சார்பாக செல்லுலார் ஆபரேட்டர்ஸ் ஆப் இந்தியா அமைப்பும் அரசுக்கு இந்த கோரிக்கையை வைத்துள்ளது. “சமதள ஆடுகளம்” (Level playing field) வேண்டும் என்பதுதான் அது. காரணம் அமைச்சரவை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் சொந்த உபயோகத்திற்கு மட்டுமான 5 ஜி வலை சேவையை (CNPN - Captive Non-Public Private Network) வைத்துக் கொள்ள அனுமதி கொடுத்திருப்பது தான். இதனால் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மூலமாக அல்லாது டி. சி.எஸ், சிஸ்கோ போன்ற நிறுவனங்கள் தனி வலைச் சேவையை வைத்துக் கொள்ளலாம் என்பதே. இதனால்தான் ஜியோ, ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்களுக்கு கோபம்.
என்ன கேட்கிறார்கள்?
- ஏன் எங்கள் மூலமே அவர்கள் அந்த சேவையைபெறலாமே?
- ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் போதுமான அளவில் இல்லாததால் டேட்டா வேகம் பாதிக்கப்படும் போது இப்படி தனியார்கள் வைத்துக் கொள்ள அனுமதி கொடுத்தால் பொது சேவை இன்னும் பாதிக்கப்படாதா?
- எங்களுக்கெல்லாம் வருவாயில் 8 சதவீதம், லைசன்ஸ் கட்டணம் என்று வாங்குகிறீர்களே! இப்படி நீங்கள் அனுமதிக்கும் தனி வலை சேவை நிறுவனங்களிடமும் வாங்குவீர்களா?
- எங்களுக்கு போடப்படுகிற வரிகள் அவர்கள் மீதும் போடப்படுமா?
- அவர்களுக்கு சலுகைகள் காட்டப்பட்டால் எப்படி நாங்கள் முதலீடுகளை செய்வது?
ஆகவே சமதள ஆடுகளம் வேண்டும் என்று அவர்களின் கடிதம் கூறுகிறது. பார்க்கும் போது நியாயம் போல தோன்றும்.
குட்டிகளை விழுங்கும் ஓநாய்
ஓநாய்கள் பற்றி பொதுவாக பேசப்படும் விசயம்தான் நினைவுக்கு வருகிறது. அவை போடும் குட்டிகளை அவையே சாப்பிடும் என்பதே அது. பிரசவத்தின் போது இறந்து போன குட்டி களை, இறந்து போய் விடும் நிலையில் உள்ள குட்டிகளை அவை தின்று விடும். தாயே குழந்தைகளை தின்பதா? என்ற மனித நீதி ஓநாய்களுக்கு பொருந்தாது. காரணம் மரணித்த குட்டிகளை அப்படியே விட்டு விட்டால் அதன் உடல்களில் எழும் நாற்றத்தால் வேறு மிருகங்கள் வந்து மற்ற குட்டிகளையும் தின்று விடும் என்பதே காரணம். நாம் இங்கு ஓநாய்களை பற்றி பேசவில்லை. ஓநாய்களின் நியாயங்கள், தர்க்கங்களையும் மீறிய முதலாளித்துவ அணுகுமுறையைப் பற்றியே பேசப்போகிறோம். இப்போது சமதள ஆடுகள நியாயத்தைப் பேசும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், பிஎஸ்என்எல் நிறுவனம் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்பதை நினைத்தாவது பார்ப்பார்களா? துவக்கத்தில் பி.எஸ் என்.எல்- லுக்கு செல் சேவை அனுமதி மறுக்கப்பட்டது. டவர்கள் அமைக்க அனுமதி கேட்ட போது இழுத்தடிக்கப்பட்டது. 4 ஜி சேவைக்கான அனுமதி, அதற்கான உபகரணங்களை வெளி நாடுகளில் வாங்குவதில் எல்லாம் தனியார்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாத போது பி.எஸ்.என்.எல்- க்கு மட்டும் மறுக்கப்பட்டது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5 ஜியை நோக்கி முன்னேறிவிட்டார்கள். பி.எஸ்என்.எல் பின்தங்கி நிற்கிறது.
பங்கு போடச் சுதந்திரம்
ஆகவே தனியார்கள் பேசுகிற சமதள ஆடுகளம் எல்லாம் என் லாபத்திற்கு பாதிப்பு வரக் கூடாது என்பது தவிர வேறு ஒன்றுமில்லை. எனக்கு லாபம் வருமென்றால் சமதளமாவது... புடலங்காயாவது! இவர்கள் பேசுகிற சுதந்திரச் சந்தை என்பது சந்தைப் பங்கை தங்களுக்குள் பங்கு போடுகிற சுதந்திரம்தான். அதில் ஊடல் வரும். ஆனால் அரசு நிறுவனங்களை சிதைப்பது என்றால் இவர்களுக்குள் கூடல்வந்து விடும். “சேம் சர்வீஸ்... சேம் ரூல்” (Same service... Same Rule) என்ற இவர்களின் முழக்கம் பி.எஸ்.என்.எல் லுக்குப் பொருந்தாதா! சேம் பிளட் (Same blood) தானே!
நசுங்கும் புல்வெளிகள்
பெரு நிறுவனங்களுக்குள் வரும் ஊடல்களை “யானைகள் காதல் செய்தால் புல்வெளிகள் நசுங்கத்தான் செய்யும்” என்பார்கள். இப்படி இவர்களின் காதலை வேடிக்கை பார்க்கிற அதே நேரத்தில் என்ன நடந்திருக்கிறது? தெரியுமா... மே 2022 இல் மட்டும் 75 லட்சம் செல் இணைப்புகளை மக்கள் துண்டித்துள்ளார்கள். ஏன்? நவம்பர் 2021 இல் இருந்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை 20 சதவீதம், 25 சதவீதம் உயர்த்தியதை சாதாரண மக்களால் தாங்க முடியவில்லை என்பதாலேயே. அம்மக்கள் பல அரசு நலத் திட்டங்களின் பயன்களை அனுபவிக்கத் தேவையான செல் இணைப்பு கூட அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. எனவே யானைகளின் காதலையும், ஊடலையும் ரசிக்க முடியாது. புல் வெளிகள் நசுங்கிப் போய் விடும்.