states

தீக்கதிர் விரைவு செய்திகள்

உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த எம்.ஆர். ஷா, தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் சில நாட்க ளுக்கு முன்பு ஓய்வு பெற்றனர். இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய கொலீஜியம், இரு  காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்கான பரிந்துரைகளை வழங்க ஒருமனதாக தீர்மானித்தது.  அதன்படி, ஆந்திர மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழ்  நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். கே.வி. விஸ்வாதன் நீதிபதியாக நியமிக்கப்படும் பட்சத்தில்,  அவர் 2030-ஆம் ஆண்டு, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியை வகிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஜூன் 1 முதல் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட அனுமதி

குடியரசுத் தலைவர் மாளிகை, பொதுமக்கள் பார்வைக்கு ஏற்கெனவே திறந்து விடப்பட்டுள்ளது. பிரதானக் கட்டடம், புல்வெளி பகுதி, அசோகா மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் முதல் பகுதியாகவும், அருங்காட்சியக வளாகம் 2-வது பகுதியாகவும் பிரிக்கப்பட்டு பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகிறது. 2 பகுதிகளையும் செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை  5 நாட்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியக வளாகத்தை திங்கட்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்கள் பார்வையிடலாம் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது. ஜூன் 1 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரு கிறது. இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

3 நாடுகள் சுற்றுப்பயணத்தைத் துவங்குகிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, மே 19 முதல் 21 வரை, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் நடை பெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். உலக அமைதி, ஸ்திரத்தன்மை, நீடித்த வளர்ச்சி, உணவு, உரங்கள், எரிசக்தி பாதுகாப்பு ஆகியவை குறித்து, இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேச உள்ளார். அதன்பின்னர், ஜப்பானில் இருந்து பப்புவா நியூ கினியா நாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி, போர்ட் மோர்ஸ்பேயில் இந்தியா நடத்தும் இந்திய பசிபிக் தீவுகளின் ஒருங்கி ணைப்பின் மூன்றாவது மாநாட்டை அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மாராபியுடன் சேர்ந்து மே 22-இல்  தொடங்கி வைக்கிறார். அங்கிருந்து ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னிக்கு செல்லும் பிரதமர் மோடி, மே 24 வரை தங்கி குவாட் மாநாட்டில் பங்கேற்கிறார்.

சத்யபால் மாலிக் உதவியாளர் வீட்டில் சிபிஐ ரெய்டு

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு ஒன்றிய பாஜக அரசுதான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தவர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக். இதையொட்டி, சிபிஐ விசாரணையையும் சத்யபால் மாலிக் எதிர்கொண்டார். தற்போது அவரது ஊடக ஆலோசகருக்கு தொடர்புடைய 8 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் புதனன்று சோதனை நடத்தினர். மறுபுறத்தில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் 100 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

சிரோமணி அகாலி தளத்துடன் பாஜக கூட்டணி சேராது

பஞ்சாப் மாநிலம் கபுர்தலா ரயில் பெட்டிகள் தொழிற்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய அரசுப் பணிக்கு தேர்வான 210 பேருக்கு ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹர்தீப் சிங் பூரி, சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் 25 ஆண்டுகளுக்கு பாஜக கூட்டணி வைத்திருந்தது. பஞ்சாப் மக்களின் தேவையை நிறைவேற்றுவதில் சிரோமணி அகாலி தளம் தோல்வியடைந்துள்ளது. எனவே, அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு: வழக்கிலிருந்து நீதிபதி விலகல்!

பீகாரில் முதற்கட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு, ஜனவரி 7 அன்று துவங்கி 21-ஆம் தேதி நடை பெற்றது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு, ஏப்ரல் 15 அன்று தொடங்கியது. இது மே 15 வரை நடை பெறவிருந்த நிலையில், பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த இடைக் காலத் தடைக்கு எதிராக, பீகார் மாநில அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலை யில், இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலிருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் தெரிவித்துள்ளார்.

10% இடஒதுக்கீட்டிற்கு எதிரான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சம் சம்பாதிப்பவர்கள் வசதி படைத்தவர்கள் என்பதும், அவர்கள் வரு மான வரி செலுத்த வேண்டும் என்பதும் சட்டமாக உள்ளது. ஆனால், ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் சம்பாதிக்கும் உயர்சாதியினரை பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் என வரையறுத்து,  ஒன்றிய பாஜக அரசு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது. உச்ச நீதிமன்றமும் ஐந்திற்கு மூன்று என்ற பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்து அடிப்படையில், இந்த இடஒதுக்கீடு செல்லும் என்று  தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், தாங்கள் அளித்த தீர்ப்பில் எந்த பிழை யும் இல்லை எனக்கூறி, சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்திற்கு ஓடிய குஜராத் நீதிபதிகள்

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி எச்.எச். வர்மா உள்ளிட்ட 68 நீதிபதிகளுக்கு, குஜராத் அரசு மாவட்ட நீதிபதி பதவி உயர்வு வழங்கியது. ஆனால், இந்த பதவி  உயர்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, 68 நீதிபதிகளில் 40 பேரின் பதவி உயர்வை திரும்பப் பெற்று, குஜராத் உயர் நீதிமன்றம் அறிவிக்கை  வெளியிட்டது. எஞ்சிய 28 நீதிபதிகளில் ஹரீஷ் ஹஸ்முக் பாய் வர்மா உள்பட 21 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். எனினும், அவர்களின் பதவி உயர்வு திரும்பப் பெறப்படவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவால் தங்களின் முந்தைய பதவிக்கு திரும்பிய நீதிபதிகளில்  பலர், இடைக்கால தடை காரணமாக தாங்கள் அவமானம் அடைந்துள்ளதாக தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

வாரணாசி ஞானவாபி மசூதி நிர்வாகத்திற்கு நோட்டீஸ்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில், சிவலிங்கம் உள்ள தாகவும், இந்த சிவலிங்கம் எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிய, ஞானவாபி  மசூதி வளாகம் முழுவதையும் இந்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும் என்று  வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை  விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக மே 19-க்குள் மசூதி நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மனு மீதான விசாரணையையும் மே 22-க்கு ஒத்திவைத்துள்ளது.

எங்களின் ஒரே இலக்கு பாஜகவை வீழ்த்துவதுதான்: தேஜஸ்வி

‘நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பாஜக-வை வீழ்த்துவது எளிது என்பதுதான்  கர்நாடக தேர்தல் முடிவு நமக்கு அளித்திருக்கும் செய்தி. அதை வலியுறுத்தித்தான் எதிர்க்  கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்’ என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி கூறியுள்ளார்.