புதுதில்லி, பிப். 6 - அதானியின் 17 லட்சம் கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், அவையில் விவாதம் நடத்தக் கோரியும் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தால், பட்ஜெட் கூட்டத்தொடரின் 5-ஆவது நாள் அமர்வும் முழுமையாக முடங்கியது. இதனிடையே, அதானியின் ஊழலை மூடிமறைக்க முயற்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு, எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதானியால் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியே ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பொதுத் துறை நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இந்திய மக்களை ஏமாற்றியும், கொள்ளையடித்துமே அதானி தனது சொத்து மதிப்பை உயர்த்திக் கொண்டார் என்று ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ ஆய்வறிக்கை குற்றம் சாட்டியிருப்பதாலும், அதுதொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று 16-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரு கின்றன. இந்த விவகாரத்தை, அவை விதி 267-இன் கீழ், நாடாளுமன்றம் உடனடியாக விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்நோட்டீஸூம் அளித்துள்ளன. ஆனால், ஆர்எஸ்எஸ்-சின் செல்லப் பிள்ளையான கவுதம் அதானியைக் காப்பா ற்றும் முயற்சியாக, ஒன்றிய பாஜக அரசா னது, நாடாளுமன்ற விவாதத்திற்கு அனுமதி மறுத்து வருகிறது. எதிர்க்கட்சிகளும் கடந்த பிப்ரவரி 2 முதல், நாடாளுமன்றத்தில் முழக்கங்களை எழுப்பி தொடர்ந்து போராடி வருகின்றனர். அவை நடவடிக்கைகள் முடங்கினாலும் பரவாயில்லை என்று மோடி அரசு பிடிவாதமாக உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 5-ஆவது நாள் அமர்வு, திங்கட்கிழமையன்று காலை 11 மணிக்கு கூடிய நிலையில், எதிர்க்கட்சிகள் மீண்டும் அதானி ஊழல் விவகாரத்தைக் கிளப்பின. “அதானி குழும விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்” என்று முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டன. மாநிலங்களவை யிலும் இதே பிரச்சனையை கிளப்பினர். இதனால், இரு அவைகளுமே பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டம்
இதையடுத்து அவைகளை விட்டு வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, ராஷ்டிரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, பாரத ராஷ்டிர சமிதி, சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோஸ் மணி), கேரள காங்கிரஸ் (தாமஸ்), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்துப் பேசிய, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “அதானி விவகாரம் பற்றி விவாதிக்கப்படக்கூடாது என்று அரசு விரும்புகிறது. அவர்கள் அதனை எப்படியாவது தவிர்க்க விரும்பு கிறார்கள். எங்கள் நோட்டீஸ் மீது நாங்கள் விவாதம் நடத்தக் கோருகிறோம். விரிவான விவாதத்திற்கு நாங்கள் தயாராக இருக் கிறோம்” என்று தெரிவித்தார். இதனிடையே பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடிய நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அதானி விவ காரத்தில் தங்களின் எதிர்ப்பை தொடர்ந்த னர். அவையின் மையத்திற்குச் சென்று முழக்கமிட்டனர். இதையடுத்து நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் திங்களன்று நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டன. செவ்வா யன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.