states

‘செல்லாக் காசு’

தமிழகத்தில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா சர்ச்சைக்குரிய நபர்.  பாஜகவில் தேசிய செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்பு களை வகித்து வந்தவர்.கட்சியின் முன்னணி நிர்வாகிகளான சி.பி.இராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமிழிசை, எல்.முருகன், அண்ணாமலை ஆகியோருடன் இணைந்து பணியாற்றி வந்தவர்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பலருக்கு ஆளுநர், மாநிலத் தலைவர் என பல்வேறு பதவிகள் கிடைத்திருந்தாலும் சர்ச்சைப் பேச்சு நாயகன் எச்.ராஜாவுக்கு மட்டும்  பெரிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் தவிர்க்கப்பட்டு வந்தது.  தற்போதைய மக்களவைத் தேர்தலில் எச்.ராஜாவுக்கு போட்டியிட எதாவது ஒரு தொகுதியில் சீட் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடமும்,கட்சியினரிடமும் ஏற்பட்டிருந்தது.  ஆனால் எந்த வாய்ப்பும் வழங்கப்படாமல் இந்த தேர்தலில் அவர் ஓரங்கட்டப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  பேட்டி, அறிக்கை, போராட்டம் என்று எந்நேரமும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டிருந்த எச்.ராஜா தற்போது, இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்.  இதுகுறித்து அவரது ஆதரவாளரிடம் பேசும் போது, சர்ச்சைப் பேச்சால் கிடைக்கும் ஓட்டுகளையும் கிடைக்காமல் செய்து விடுவார் என்பது ஒரு காரணம்; மேலிட செல்வாக்கு எதுவும் இல்லை என்பது இன்னொரு காரணம். அவரது பெயரை சிபாரிசு செய்யக் கூட யாரும் முன்வரவில்லை எனத் தகவல்.  அது போகட்டும், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்திற்காவது எச்.ராஜாவை அழைப்பார்களா என்று கேட்டால் அதுவும் சந்தேகம் தான் என்று கூறுகின்றனர்.  - ஆரூரான்