ஈரோடு, பிப்.9- அனுமதி பெறாமல் கூட்டம் நடத்திய அதிமுகவினரை திருமண மண்டபத்திலிருந்து வெளியேற்றி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு மாவட்டம், கிருஷ்ணம்பாளையம் அருகே உள்ள ஜீவா நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வியாழனன்று காலை அனுமதியின்றி கூட்டம் நடைபெறுவதாக பறக்கும் படை அலுவலர் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் அந்த திருமண மண்டபத்திற்கு சென்றனர். அப்போது அதிமுகவினர் கூட்டம் நடத்துவதற்கான ஆயத்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையறிந்த படை அலுவலர் அனுமதி இன்றி இங்கு கூட்டம் நடத்தக்கூடாது உடனடியாக கலைந்து செல்லுங்கள் என்று அதிமுகவினரிடம் கூறினார். இதனை ஏற்காமல் அதிமுகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் காவல் துறையினருடன் மண்டபத்திற்கு வந்தனர். அவர்களுடனும் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின் அதிமுகவினர் மண்டபத்திலிருந்து வெளியேறினர். இதேமண்டபத்தில் கடந்த ஜன.31 ஆம் தேதியன்று அதிமுகவினர் அனுமதியின்றி கூட்டம் நடத்தினர். அப்போதும் பறக்கும் படை அதிகாரிகள் வந்து அனுமதியின்றி கூட்டம் போடக்கூடாது என்று கூறி கலைந்து போக செய்தனர். இரண்டாவது முறையாக மீண்டும் அனுமதியின்றி கூட்டம் கூடியதால் திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர்.