மதுரை,ஏப்.21- மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க வேண்டிய பல்கலைக்கழக நிர்வா கமும், துணைவேந்தரும் அத்துமீறலில் ஈடு பட்ட பேராசிரியர்களை பாதுகாக்கின்ற வேலையை செய்து வருகின்றனர். சமீபத்தில் சமூகவியல் துறை மாணவிகளிடம் அத்து மீறலில் ஈடுபட்ட பேராசிரியர் கருப்பையா மீது மாணவிகள் கொடுத்த புகார் தொடர் பாக பல்கலைக்கழக நிர்வாகம் நட வடிக்கை எடுக்கத் தவறியது. இதனால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தலையீட்டால் கைது செய்யப்பட்ட அன்றே பேராசிரியர் கருப் பையா பிணையில் வெளியே வந்து விட்டார். அதுமட்டுமில்லாமல் புகார் கொடுத்த மாணவிகளை நிர்வாகத்தின் துணையுடன் சில பேராசிரியர்கள் மிரட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைக்கண்டித்தும் பல்கலைக்கழக மாணவிகளிடம் அத்துமீறும் போக்கைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும் உயர்கல்வித் துறையும், பல்கலை நிர்வாகமும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடி விலக்கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் தலைமை வகித்தார். மாதர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மல்லிகா, புறநகர் மாவட்டச் செயலாளர் க. பிரேமலதா, மாவட்டத் தலைவர் மலர்விழி, மாநகர் மாவட்டச் செயலாளர் வை.ஜென்னி யம்மாள், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழரசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் க.பிருந்தா ஆகி யோர் பேசினர். முன்னாள் சட்டமன்ற உறுப் பினரும் மாதர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினருமான கே.பாலபாரதி நிறைவுரை யாற்றினார். மாதர் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் லதா நன்றி கூறினார்.
கே.பாலபாரதி பேசியதாவது:
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது தொடரும் பாலியல் அத்துமீறல்களை பல்கலைக்கழகம் இருக்கக்கூடிய நாகமலைப்புதுக்கோட்டை பகுதி மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.மாணவிகளுக்கு ஆதரவாக நாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு இப் பகுதி பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு ஆதரவு தர வேண்டும். இதே பல்கலைக்கழகத்தில் சின்னமனூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் மாடியில் இருந்து விழுந்து இறந்துவிட்டதாக கூறுகிறார்கள். இதுகுறித்து துணை வேந்தர் அறிக்கை வெளியிட்டாரா? காவல்துறை வழக்கு பதிந்து உள்ளதா? இல்லை. அந்த மாணவி யின் மரணத்திற்கு துணைவேந்தர் மீது வழக்கு பதிவு செய்யுங்கள். அந்த மாண வியை பறிகொடுத்த பெற்றோருக்கு ஒரு ஆறுதல் கூறியிருப்பாரா இந்த துணை வேந்தர். இந்த பல்கலைக்கழகத்தில் ஏதோ ஒரு குற்றவாளி உள்ளான். அதை கண்டு பிடியுங்கள். இல்லையென்றால் அந்த குற்றவாளியை மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள் வெளியே கொண்டுவந்து அம்பலப்படுத்துவார்கள். காமராசர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கொடுக்கப்பட்டுள்ள பிணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.