states

90% நிதி வெட்டு - தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி மக்களுக்கு மோடி அரசு துரோகம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. கடந்த 2018-19 முதல் 2022-23 வரையிலான 5 ஆண்டுகளில்  3 ஆயிரத்து 19 கோடியே 65 லட்சம் வரை நிதி ஒதுக்கியுள்ளது. அதில் கடந்த 2018-19 நிதியாண்டில் மட்டும் ரூ.1,553 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்நிதியை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக குறைத்து, கடந்த 2022-23 நிதியாண்டில் வெறும் ரூ.159.78 கோடிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.  இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம், மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக் தகவல்கள் பெற்றுள்ளார்.  தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒன்றிய அரசு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கிய நிதி விபரங்கள் பற்றி கோரப்பட்ட தகவலுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் அளித்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. 2018-19 ஆம் ஆண்டு ரூ.1,553 கோடி ஒதுக்கிய மத்திய அரசு, 2019-20 ஆம் ஆண்டு 385.51 கோடியும், 2020-21 ஆம் ஆண்டு ரூ.541.29 கோடியும், 2021-22 ஆம் ஆண்டு ரூ.379.59 கோடியும், 2022-23 ஆம் ஆண்டு 159.78 கோடியும் ஒதுக்கியுள்ளது. ஒன்றிய அரசு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத்திட்ட நிதி ஒதுக்கீட்டை அடியோடு புறக்கணித்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இவ்வாறு நிதி ஒதுக்கீடுகளை தொடர்ந்து குறைத்து வருவதால் மாநிலத்தில் பல வருடங்களாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக பிரத்யேகமாக வழக்கத்தில் இருந்து வந்த கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுப் பணிகள் பாதியிலேயே முடங்கியுள்ளது. தமிழகத்தில் வாழும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இம்மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சிகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.