states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கோவை சம்பவ வழக்கு :  ஆளுநருக்கு அமைச்சர் பதில்

தூத்துக்குடியில்  தொழில்துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கோவை வழக்கினை பொறுத்தவரை யில் என்ஐஏ முழுமையாக விசாரிக்க தமிழக அரசு ஒத்துழைப்பு அளித்து வருகின்றது. அனைத்து விசாரணை ஆவணங்களும் என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்த ஜெனிசா முபின் ஏற்கனவே என் ஐஏ-வால் விசாரணை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது. அந்த விவகாரங்களில் தாமதமாக சென்று விசாரணை மேற் கொள்ளும் என்ஐஏ தமிழகத்தில் கோவையில்  நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் மட்டும் நான்கே நாட்களில் வந்து விசாரணை-யை தொடங்கி உள்ளது.கோவை கார்வெடிப்பு விவ காரத்தில் எந்தவித ஆதாரங்களையும் அழிக்க வில்லை. ஆனால் தமிழக ஆளுநர் கோவை  கார் வெடிப்பு விவகாரத்தில் தேவையில்லா மல் பேசி வருகின்றார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

பாலியல் புகாரில் ஜிதேந்திர நரைன் விசாரணைக்கு ஆஜர்

அந்தமான் - நிகோபார் தீவுகளின் தலைமைச் செயலாளராக இருந்த ஜிதேந்திர நரைனும், தொழிலாளர் துறை ஆணையாள ராக இருந்த ரிஷி என்பவரும், அரசு வேலை  வாங்கித் தருவதாகக் கூறி 20-க்கும் மேற்பட்ட  பெண்களை கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கி யதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அண்மையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை யொட்டி அக்டோபர் 17-ஆம் தேதி நரைன்  பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். நவம்பர் 14-ஆம் தேதி வரை அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவருடன்  ரிஷியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளார். இந்நிலையில், ஜிதேந்திர நரைன் வெள்ளி யன்று சிறப்பு விசாரணைக் குழு முன்பு ஆஜரானார்.

சிவில் சொசைட்டி தலைவராக மாதா அமிர்தானந்தமயி

‘ஜி20’ அமைப்பில் ஐரோப்பிய யூனியன் மற்றும் 19 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.  இதில் இந்தியா கடந்த 1999-இல் இணைந்தது. வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அடுத்தாண்டு நவம்பர் 30-ம் தேதி வரை ‘ஜி20’  அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கு கிறது. அடுத்த ‘ஜி20’ உச்சி மாநாடு தில்லியில்  2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 9, 10 தேதிகளில் நடைபெறுகிறது. ‘ஜி20’ அமைப்பில் சிவில்  சொசைட்டி அமைப்புகளின் (சிஎஸ்ஓ) பிரதி நிதித்துவம் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கி யது. இது ‘சி20’ என அழைக்கப்படுகிறது. இந்த ‘சி20’ பிரிவுக்கு இந்தியத் தலைவராக- பெண் சாமியாரான மாதா அமிர்தானந்தமயி தேவியை நியமித்து, ஒன்றிய நரேந்திர மோடி அரசு உத்தரவிட்டுள்ளது.

ராகுலின் ஒற்றுமைப் பயணத்தில் அசாருதீன் பங்கேற்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வெள்ளிக்கிழமை யன்று அவர் 2-ஆவது நாளாக, தெலுங்கானா மாநிலத்தில் நடைப்பயணத்தைத் துவக்கி னார். இந்நிலையில், அவரது நடைப்பய ணத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகம்மது அசாருதீன் கலந்து கொண்டார். அசாருதீன், தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பாக அளவில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரி வித்துள்ளார். மேலும், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியுள்ளது என்று கூறியிருக்கும் பாலச்சந்திரன் “தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதிதான் விலகியது. தொடர்ந்து மற்றொரு புயல் உருவாகி வங்கதேச பகுதிக்குச் சென்றது. இந்த இரண்டு காரணி களும்தான் வடகிழக்கு பருவமழை துவக்கத்தை தாமதப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஆதாரம் கேட்டு அகிலேஷிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

“தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே பாஜக மற்றும் அதன் உதவியாளர்களின் உத்தரவின் பேரில், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் யாதவர்கள் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகளில் 20 ஆயிரத்தை குறைத்தது. விசாரணை நடத்தினால், பலரது பெயர்கள் நீக்கப்பட்டது தெரிய வரும்” என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கடந்த மாதம் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலை யில் அகிலேஷ் அவரது குற்றச்சாட்டு களுக்கான ஆதாரத்தை நவம்பர் 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியை ஐ.நா. அலுவல் மொழியாக்க மோடி அரசு தீவிரம்

12-ஆவது உலக இந்தி மாநாட்டை நடத்துவ தற்கான ஏற்பாட்டுப் பணிகள் குறித்த கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் மாநாட்டை பிஜி நாட்டில் உள்ள நாடி நகரில் 2023 பிப்ரவரி 15 முதல் 17-ஆம் தேதி வரை நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு உள் ளது. இந்நிலையில், கூட்டத்திற்குப் பின்  பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.  ஜெய்சங்கர், ஐ.நா. அமைப்பின் அலுவல்  மொழிகளில் ஒன்றாக இந்தியை இணைப்ப தற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். “ஐ.நா. அமைப்பில் இந்தி மொழியை அலுவல் மொழியாக்குவது அவ்வளவு எளிதானதல்ல!” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நவ.8-இல் ரஷ்யா பயணம்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நவம்பர்  8-ஆம் தேதி ரஷ்யா  செல்லவிருப்பதாகவும், மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவுடன் அவர் ஆலோசனை நடத்த வுள்ளதாகவும், ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா தெரிவித்துள்ளார். எனினும், ஜெய்சங்கரின் ரஷ்ய பயணம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

சிறைத்தண்டனை பெற்ற  ஆசம்கான் எம்எல்ஏ தகுதி இழப்பு?

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான். இவர் மீது ஊழல், ஆதித்யநாத் ஆட்சியில் மோசடி, திருட்டு என சுமார் 90 வழக்கு கள் போடப்பட்டன. ராம்பூரில் 2019-இல்  நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத் தில் பிரதமர் மோடி, மாநில முதல்வர் ஆதித்ய நாத் ஆகியோருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சா ரத்தில் ஈடுபட்டதாகவும் வழக்கு ஒன்று போடப் பட்டிருந்தது. இந்த வழக்கில், ஆசம் கானுக்கு  3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 6 ஆயி ரம் அபராதமும் விதித்து ராம்பூர்  எம்.பி., எம் எல்ஏ-க்கள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் ஆசம் கான் அவரது எம்எல்ஏ பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 குரூப் 2 தேர்வு முடிவுகள்:  ஆதாரமற்ற தகவல்களை நம்பாதீர்

சென்னை, அக்.28- குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்து  டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குரூப் 2 முதல் நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி  நடைபெற்றது. இதற்கிடையில் மகளி ருக்கான இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்துவது தொடர்பான பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த  வழக்குகளில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு  வழங்கி உள்ளது. உயர் நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் நிலையில்  உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்த  பின்னர் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். இது தொடர்பாக வெளியாகும் ஆதார மற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். அதிகாரபூர்வ தகவல்க ளுக்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கல்பாக்கத்தில் மழைக்கால பேரிடர் மீட்பு ஒத்திகை 

சென்னை,அக்.28- வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையடுத்து பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு கல்பாக்கம் அணுமின் நிலைய வளா கத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்டு படையினர் ஒத்திகை பயிற்சி அளித்தனர். கனமழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களை உடனடியாக மீட்பது, கடலில் பூகம்பம் ஏற்பட்டு சுனாமி  வந்தால் மீனவர்களை எப்படி காப்பாற்று வது, கால்நடைகளை அப்புறப்படுத்து வது, மருத்துவ குழுவின் செயல்பாடு கள் உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை பயிற்சி கள் நடத்தப்பட்டது. இதற்காக அரக் கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் நவீன கருவிகள், மீட்பு  சாதனங்கள், பாதுகாப்பு உடைகள், தொலைதொடர்பு ராடர்கள் போன்ற வைகளை கொண்டு வந்திருந்தனர்.

பழங்குடி நலவாரியம் : உதவித்தொகை உயர்வு

சென்னை,அக்.28- பழங்குடி நலவாரிய உறுப்பினர்களுக்கான விபத்து, கல்வி உள்ளிட்ட  நலத்திட்ட உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டி ருப்பதாவது: உதவித்தொகை உயர்த்துவதன் மூலம் சுமார்  3,826 பயனாளிகள் பயன் பெறுவர். விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம், இயற்கை மரணத்துக்கு ரூ.30 ஆயிரம், முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.4  ஆயிரம், தொழில் பட்டப் படிப்புக்கு ரூ.4 ஆயிரம்,  தொழில் பட்ட மேற்படிப் புக்கு ரூ.6 ஆயிரம் என உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். அதேபோல, திருமண உதவித்தொகை ஆணுக்கு ரூ.3 ஆயிரம், பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் என உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்திக்கடவு - அவினாசி திட்டம்  ஜனவரியில் முடிவடையும்:  அமைச்சர்

சென்னை, அக்.28- அத்திக்கடவு - அவினாசி திட்டம்  மற்றும் சேலம் சரபங்கா வடிநிலத்தி லுள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், “அத்திக்கடவு அவி னாசி திட்டத்தில் 97 விழுக்காடு  பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதில் குழாய் பதிக்கும் பணி  களில் மொத்தம் 1065 கி.மீட்டரில்  சுமார் 1033 கி.மீ தூரத்திற்கு முடிக்கப்பட்டுள்ளது” என்றார். ஈரோடு மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பணிகள் முடிப்பதில்  சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், எதிர்வரும் டிசம்பர் 2022-க்குள் அனைத்து பணி களும் முடித்து சோதனை ஓட்டம்  நடத்தப்பட்டு ஜனவரி மாத  இறுதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர உத்தேசிக்கப் பட்டுள்ளது. சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்தில் இதுவரை 87 விழுக்காடு பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் 3 மாதங்களில் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கேரளாவில் பறவைக் காய்ச்சல் : எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

திருவனந்தபுரம், அக்.28- கேரளாவில் பரவும் பறவை காய்ச்சலால் தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள 6 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  ஆலப்புழாவில் கடந்த வாரம் 1000-க்கும் மேற்பட்ட வாத்துகள் பறவை  காய்ச்சல் நோயால் இறந்தது உறுதியானது.  எனவே, நோய் பரவலை தடுக்கும் வித மாக 25 ஆயிரம் கோழிகளை அளிக்க கேரள அரசு முடிவு செய்தது. அண்டை மாநி லத்தில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப் பட்டு இருப்பதால் நாமக்கல் மற்றும் சுற்று  வட்டாரங்களில் உள்ள கோழி பண்ணை களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழி பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், கோவை மாவட்ட எல்லையில் உள்ள வாலையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக்காட்டி, பட்டி சாலை, தோலம்பாளையம் ஆகிய சோதனை சாவடிகளில் கால்நடை மருத்து வர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  முன்னெச்சரிக்கையாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கோழி, முட்டை மற்றும் தீவனங்களை கேரளாவில் இறக்கி விட்டு திரும்பும் வாகனங்களின் எண் மற்றும் முகவரி பதிவு செய்யப்படுகின்றன.   பன்றிகளுக்கு ஆப்பிரிக்க காய்ச்சல் இந்நிலையில், கோட்டயம் பகுதிகளில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க காய்ச்சல் பரவி வருவது தெரியவந்துள்ளது. கடந்த சில  தினங்களாக இங்குள்ள மீனச்சல் பகுதி யில் உள்ள பண்ணைகளில் பன்றிகள் இறந்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது.  இதையடுத்து மீனச்சல் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பன்றி இறைச்சி விற்பனை செய்ய தடைவிதிக்கப் பட்டுள்ளது. மேலும் இங்கிருந்து பன்றி களை வெளியூர்களுக்கு கொண்டு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் தேர்தலில் பலத்த அடி விழும்! ஜனநாயகக் கட்சி உதறல்

வாஷிங்டன், அக்.28- கருத்துக் கணிப்புகளில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராக முடிவுகள் வருவதால் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சிக்குப் பின்னடைவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 8 ஆம் தேதியன்று நடைபெறும் தேர்தல்களில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கு 435 பேரும், செனட் அவைக்கு 35 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள். அதோடு 39 மாகாணங்களின் ஆளுநர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்வு முடிவுகள் அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான முன்னோட்டமாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் செயல்பாட்டில் தங்களுக்கு திருப்தியில்லை என்று 56 விழுக்காடு அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காலப் என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்திருக்கிறது. ஆனால், ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் அவருக்கான ஆதரவில் பெரும் சரிவு இல்லை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. அதேவேளையில், எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் இவருக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக்கட்சி ஆகிய இரண்டையும் சாராமல் இருக்கும் மக்களும் ஜோ பைடனின் செயல்பாட்டில் திருப்தியடையவில்லை. அவர்களில் 64 விழுக்காட்டினர் தங்களுக்குத் திருப்தியில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஜோ பைடனின் செயல்பாடு மீதான அதிருப்தி நவம்பர் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜனநாயகக் கட்சியின் சில தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது காலப் நிறுவனம் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பிலும் பிரதிபலித்துள்ளது.