சென்னை,பிப்.10- போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி விபத்தைக் குறைப்போம், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோம், பலப்படுத்துவோம் என்ற முழக்கங்களுடன் பிப்ரவரி 12 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் 22 நகரங்களில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுபோக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் கே. ஆறுமுக நயினார், பூவுலகின் நண்பர்கள் கோ.சுந்தர்ராஜன் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- போக்குவரத்து இயங்கினால்தான் உலகம் இயங்கும், உலக இயக்கத்திற்கு அவசியமான போக்குவரத்தால் ஏற்படும் ஆபத்துகளும் தடுக்க வேண்டும். விபத்துகள் உலகில் விபத்துகள்அதிகம் நடைபெறும் நாடு இந்தியா. அதிக விபத்துகள் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு. நாடு முழுவதும் வருடத்திற்கு 4.5 லட்சம் விபத்துகள் ஏற்படுகின்றன. 1.5 லட்சம் பேர் மரணமடைகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 17000 பேர் மரணமடைகின்றனர். இதுபோன்ற விபத்துகளில் ஊனமானோர் பல லட்சம் பேர். பல குடும்பங்களின் வாழ்வை சீர்குலைக்கும் விபத்துகளைத் தடுக்கவேண்டும். சுற்றுச்சூழல் ஆபத்து சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு உலகம் வெப்பமயமாதல் மனிதகுலம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனையாகும். மழை, புயல், வெள்ளம் எனபேரழிவுகள்தொடர்கிறது. எதிர்கால தலைமுறைகள் கையில் இப்பூமிப்பந்தை பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும்.
கார்பன் வெளியேற்றமே உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாகும். கோடிக்கணக்கான வாகனங்கள் உமிழும் கார்பனும் வெப்பமயமாதலுக்கு முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல்
கட்டுப்பாடற்ற வாகனப் பெருக்கம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. நகரங்கள் முதல் சிறு கிராமம் வரை வாகன பெருக்கத்தால் ஏற்படும் தடை திரும்ப கிடைக்காத காலத்தை விரயமாக்குகிறது. இந்த ஆபத்துகளை தடுக்க தனிநபர் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். எனவே, விழிப்புணர்வை ஏற்படுத்த மினி மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மார்த்தாண்டம், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், ஊட்டி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கடலூர், உளுந்தூர்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட 22 நகரங்களில் பிப்.12 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் சென்னையிலும், வீட்டுவசதி துறைஅமைச்சர் எஸ். முத்துச்சாமி, போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் ஆகியோர் ஈரோட்டிலும் பங்கேற்க உள்ளனர். மற்ற இடங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தி நடைபெறும் இம்மாரத்தான் போட்டியின் நோக்கங்களை வெற்றி பெறச் செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.