states

கட்சியின் நவீன பிரச்சார வாகனமாய் தீக்கதிரை செதுக்குவோம் - - சு.பொ.அகத்தியலிங்கம்

தீக்கதிரின் ஆதி பிறப்பு சென்னை தான். கால ஓட்டத்தில் மதுரையின் முகவரியாய்ப் போனது. சென்னையி லிருந்து ஓர் பதிப்பு வரவேண்டும் என்பது  நெடுநாள் கோரிக்கை. 1993 நவம்பர் 7 ஆம்  நாள் சென்னைக் கனவு கைக்கூடியது.  அப்போது முதல் இருபது ஆண்டு கள் அதனோடு நான் பிணைக்கப் பட்டேன். 2013 இல் விருப்ப ஓய்வில் விடை  பெறும்வரை தீக்கதிரோடு நானும் பயணித்த அனுபவமே தனி.  செய்தியாளர்களே இல்லாமல் செய்திப் பத்திரிகை நடத்த முயன்ற அனுபவத்தின் கதை மட்டும் நூறு பக்கம் எழுதலாம். தீக்கதிரின் உள்ளடக்கம் 1993 க்கு முன்பு எப்படி இருந்தது இன்று எவ்வளவு மாறி இருக்கி றது என ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே வளர்ச்சி புலனாகும். தீக்கதிருக்கு  என்று ‘பக்கக் கொள்கை’ [page policy] க்காக  நானே மூன்று முறை முயற்சித்து மாதிரி தயாரித்ததும், விவாதித்ததும் நினைவில் ஆடுகிறது. ஆகவே ஒவ்வொரு சிறு முன்னேற்றமும் கூட பெரும் முயற்சிகளுக்கு பின்னேதான் உதிர்ந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

செய்தியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க நான், மயிலை பாலு, அ.குமரே சன், வி.பரமேசுவரன், எஸ்.பி.ராஜேந்தி ரன் ஆகியோர் பாடத்திட்டம் உருவாக்கி பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எனலாம். சென்னை போன்ற பெருநகரங்களின் பத்திரிகை விநியோகம் என்பது பெரும் சவால். இன்று வரை பெரும் செலவை விழுங்கிவிட்டு திருப்தியை நெருங்க முடியாமல் திணறும் நிலைதான். எல்லா சிறு பத்திரிகைகளுக்கும் இதே நிலைதான்.  அதேபோல் நிதி நெருக்கடி பல சோதனை முயற்சிகளுக்கு உந்தித் தள்ளின. பொங்கல் மலருக்கு அப்பால், விளம்பரத்தை மட்டுமே மைய மாக வைத்து தீபாவளி மலர், ரம்ஜான்  மலர், கிறிஸ்துமஸ் மலர் எனக் கொண்டு  வந்த முயற்சி சென்னைப் பதிப்புக்குரி யது. இதனால் கடும் அரசியல் விமர்சனங்களை எதிரிகளிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் பெற்றோம். 

ஒருநாள்கூட தீக்கதிர் மீதான புகார், விமர்சனம், கண்டனம் இவை இன்றி  பொழுது விடிந்ததாய் எனக்கு  நினைவு இல்லை. ஆயினும் தீக்கதிரின்  அரசியல் விமர்சனப் பெட்டிச் செய்தி கள் பெரும் ஈர்ப்பைப் பெற்றது நிறைவா னது. அதுவும் கலைஞர்  ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தீக்க திருக்கும் முரசொலிக்கும் நடக்கும் அரசியல் விவாதம் சுவையானது. அதே  போல் தீக்கதிரில் வரும் எக்ஸ்போசர் களுக்கு உரிய மதிப்பளித்து காலை யிலேயே கலைஞர் விசாரிப்பது கூடுதல்  பரபரப்பாகும். அதிமுக ஆட்சி எனில் கண்டுகொள்ளாது.  சாய்பாபா சென்னையில் கருணா நிதியைச் சந்தித்தது குறித்து நான் ஒரு செய்தி அலசல் எழுதினேன்.மறு நாள் காலை தோழர் என்.வரதராஜனும் டி.கே.ரங்கராஜனும் கலைஞரைப் பார்க்கச் சென்றுள்ளனர்.அந்த செய்தி  அலசலைச் சுட்டிக்காட்டி கலைஞர்  பேசியதுடன்,அதனை மறுநாள்  முரசொலியில் வெளியிடப்போவ தாகவும் துரைமுருகன், தயாநிதிமாறன் குறித்து கிண்டலடித்து எழுதி இருப்பது  சற்று ஓவர் என்றும் ஆயினும் அப்படியே  பிரசுரிப்பேன் எனவும் சொன்னார். ஆம், அப்படியே பிரசுரமானது.

கவனக் குறைவினாலோ, சில தொழில் நுட்பச் சிக்கலாலோ பிழை திருத்தம் சரி செய்யப்படாமல் அச்சாகி  பெரும் அவமானங்களை கொண்டு வந்ததுண்டு. அதன் பொருட்டு தீக்கதிரில் நான் மிகுந்த வேதனைப்பட்ட நிகழ்வு களும் நிறைய உண்டு.  ஒரு முறை தினமணி ஆசிரியர் ஞானசம்மந்தம் உரையாட என்னை அழைத்திருந்தார். பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார். அப்போது நான் அவரிடம் தீக்கதிரில் வரும் பிழை களைத் தவிர்க்க ஆலோசனை சொல்லுங்கள் என்றேன்.  அவர் சொன்னார், “பக்கத்துக்கு ஆறு  பேர் பணி செய்யும்  எங்களாலேயே பிழை  இல்லாமல் கொண்டுவர முடியவில்லை.  நாலைந்து பேர் மொத்த பக்கங்களை யும் கொண்டுவருவதை எங்களால் யோசித்துப் பார்க்கக்கூட முடியாது.”  தொடர்ந்து பேசுகையில் அவர் சொன்னார், “எங்கள் வாசகர் ஒரு பிழையைப் பார்த்தால் அது தனிப் பட்ட தாகப் போய்விடும். ஒற்றைத் தீக்குச்சி யாய் அணைந்து முடிந்து போகும். வாசகர் கடிதமாய் வருவது மிகக்குறைவு. ஆனால் நீங்கள் அமைப்பாய் உள்ளதால் சின்ன பிரச்சனையும் சீக்கிரம் வலுவாய் ஒலித்துவிடும். கட்சிப் பத்திரிகைகளுக்கு இது ஒரு சவால்” என்றார். 

இது ஒரு புறம். இன்னொரு புறம்  ஒருவர் கட்சிப் பத்திரிகையில் பணி யாற்றும் போது உரிய அங்கீகாரமோ, பாராட்டோ எதிர்பார்க்கவே முடியாது.கடும் விமர்சனங்களே கிடைக்கும்.   ஒரு சிலர் பத்திரிகையைவிட்டு வெளி யேறி இன்னொரு ஊடகத்தில் சேர்ந்த நொடிமுதலே அவரைப் பாராட்டுவதும் உறவாடுவதும் அன்றும் இன்றும் தொடர்கதையே.சென்னைப் பதிப்பில் இதன் பாதிப்பு அதிகம்.   எதிர்மறை அனுபவம் மட்டுமல்ல நேர்மறை அனுபவமும் உண்டு. “விடுதலைத் தழும்புகள்” தீக்கதிரில் கிட்டத்தட்ட ஓராண்டு வெளியாகி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிற ஏடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது. எனில் மிகை அல்ல.  கிட்டத்தட்ட எனது ஐந்து நூல்கள் தீக்க திரில் தொடராக வந்தவை என்பது கூடுதல் மகிழ்ச்சி. அதற்காக தீக்கதி ருக்கு இந்த வேளையில் நன்றி தெரிவிப்பது என் கடமை! 

தீக்கதிர் நூல் விமர்சனம் பெரிதாக வரவேற்பைப் பெற்றது. தீக்கதிர்  “புத்தக மேசைக்கு” பதிப்பகங்கள் போட்டி போட்டு புத்தகங்கள் அனுப் பின.வைக்க இடமின்றி திணறினோம். ஆசிரியர் குழுவினர் மொத்த பேரை யும் நூல்கள் வாசிப்பிலும் நூல்விமர்சனத்திலும் ஈடுபடுத்தியது சென்னைப் பதிப்பின் வலுவாக அமைந்தது.வண்ணக்கதிர் அறிமுக எழுத்தாளர்களுக்கு வாசலை அகலத்திறந்து வைத்தது. இதனை பெருமையோடு சொல்ல முடியும்.  சென்னைப் பதிப்பு துவங்கிய போது, யதார்த்தத்தை மீறிய கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும் களத்தில் குதித்தோம். சிராய்ப்புகளோடும் காயங்களோடும் தாக்குப் பிடித்து நின் றோம். நிற்கிறோம். முழுக்க முழுக்க செய்திப் பத்திரிகையாகக் கொண்டுவர முயன்றோம். மற்ற ஏடுகளுக்கு இருக் கும் அடிப்படை கட்டமைப்பும் மனித வளமும் இல்லை. திணறி முயற்சியில் தோற்றோம். வெறும் கட்சி ஏடாய் சென்னைப் பதிப்பு வாசகர்களைத் திருப் திப் படுத்த முடியவில்லை. செய்தி வாயி லாக கருத்து என்ற வடிவம் இன்னும் வலுவாக வேண்டியுள்ளது.

“உலகம் உயர்ந்தோர்கள் மாட்டே”  என்பார்கள். அதை நான் ஒப்புக்கொள்ள  மாட்டேன். “உலகம் பிரச்சாரத்தின் மாட்டே” என்பதுதான் உண்மை; ஆகவே  தான் நான் ஓயாமல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன் என்றார் பெரியார். வெறும் பிரச்சாரம் என்ன விளைவை ஏற்படுத்தி விடப்போகிறது? நடை முறைப்படுத்த அமைப்பு வேண்டாமா? வேண்டும். அவரிடம் அமைப்பும் இருந்தது. பிரச்சாரமும் இருந்தது. இரண்டும் இணைந்தபோது அது ஒரு மாபெரும் சக்தியாக எழுந்தது.” பொன்விழா ஆண்டில் நான் எழுதியது. இந்த அனுபவம் இப்போதும் பொருந்துமே!  இன்று எந்த ஊடகமும் செய்தி என்கிற  வட்டத்துக்குள் மட்டும் இல்லை. செய்தி வழி கருத்துத் திணிப்பு செய்து கொண்டே இருக்கிறது. இது இன்றைய ஊடக சொல்நெறியாகிவிட்டது. இச்சூழலில் கட்சியின் நவீன பிரச்சார வாகனமாய் தீக்கதிரைச் செதுக்க இன்னும் கூடுதல் முயற்சியும் படைப்பூக்கமும் தேவைப்படுகிறது. 

இதுதான் நமது ஏட்டின் பாதையும் தேவையும் என நம் அணிகளை பயிற்று விக்காமல் தீர்வு சாத்தியம் இல்லை.ஆக தீக்கதிரின் எதிர்காலம், வாசகர், தீக்கதிர் இருமுனை முன்னெடுப்பு; புரிதல்,  ஒத்துழைப்பைச் சார்ந்ததே. பொன் விழா  ஆண்டில் நான் எழுதிய கட்டுரையி லிருந்து ஓர் எச்சரிக்கை:  “உள்ளூரில் நடக்கும் ஒரு சின்ன  நிகழ்வுக்கு பெரிய படமும் செய்தியும் போட்டு நம்மை ஈர்க்கும் பிற ஏடுகள்;  நெருக்கடியான நேரத்தில் - முக்கி யமான நேரத்தில் அடக்கி வாசித்தோ- அவதூறு பொழிந்தோ கழுத்தை அறுத்து விடுவார்கள் அல்லவா? இதை நாம் உணர்ந்தாக வேண்டாமா?”  “கட்சிப் பத்திரிகையை படிப்பதும் விற்பதும்தானே ஒரு கட்சி உறுப்பி னரின் முதன்மைப் பணிகளில் ஒன்றாக  இருக்க முடியும்?” என்கிற கேரள முதல்வர் தோழர் இ.கே.நாயனாரின் அறிவுறுத்தலை ஒரு கணமும் மறக்கவே கூடாது. 

(தீக்கதிர் சென்னைப்பதிப்பின் 30வது ஆண்டு விழாவை முன்னிட்டு )