புதுதில்லி, டிச.16- நாட்டில் 5 கோடிக்கும் அதிகமான வழக்கு கள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடப்பதற்கு, கொலீஜியம் அமைப்பே காரணம் என்று ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஒரேயடியாக பழியைத் தூக்கிப் போட்டுள்ளார். நீதிபதிகள் நியமனத்திற்கு புதிய அமைப்பை உருவாக்கும் வரை இந்தப் பிரச்சனை இப்படியே தான் தொடரும் என்றும் அலட்சியமாகப் பேசி யுள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், நீதித்துறை நியமனங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, அமைச்சர் கிரண் ரிஜிஜூ வியாழனன்று பதிலளித்துப் பேசியுள்ளார். அப்போதுதான் மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார். “நாட்டிலுள்ள உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 1,108 ஆகும். இவற்றில் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி நிலவரப்படி 777 நீதிபதிகள் பணியில் உள்ள னர். 331 இடங்கள்- அதாவது, 30 சதவிகித இடங் களில் காலியாக உள்ளன. இதை நிரப்பு வதற்காக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இருந்து பெறப்பட்ட 147 பரிந்துரைகள், அரசு மற்றும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் இடையே பல்வேறு கட்டங்களில் செயலாக்கத்தில் உள்ளன. இந்த (2022) ஆண்டில், டிசம்பர் 9-ஆம் தேதி வரை, சாதனை அளவாக 165 நீதிபதிகளை பல்வேறு உயர் நீதிமன்றங்களில் அரசு நியமித்துள்ளது. இது ஒரு ஆண்டில் நிய மிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்காக கொலீஜியம் அனுப்பிய 20 பரிந்துரைகள், அரசால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகளில், டிசம்பர் 5-ஆம் தேதி நிலவரப்படி 27 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 7 இடங்கள் காலியாக இருக்கின்றன” - என்று புள்ளி விவரங்களை அள்ளிவிட்டுள்ள சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இவ்வாறு பணி யிடங்கள் காலியாக இருப்பதற்கு, உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி தலைமையில் 5 மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம் அமைப்பே காரணம் என்று குற்றம்சாட்டியுள் ளார்.
“நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை தொட்டு விட்ட நிலையில், நீதிமன்றங்களில் காலியிடங்களை நிரப்புவதற்கு அரசிடம் குறைவான அதிகாரமே உள்ளது; கொலீஜியம் பரிந்துரைக்காத பெயர்களை அரசால் பரிசீலிக்க முடியாது” என்று பாதி உண்மையும் பாதி பொய்யும் கலந்து, நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும், “நீதிபதிகள் நியமனங்களுக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதிபதி களின் காலியிடங்கள் மற்றும் நியமனங்கள் இப்படியே தொடரும். அதுகுறித்த கேள்வி களும் தொடர்ந்து எழும்” என்றும். நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் என்ற ரீதியில் விட்டேத்தியாக பதிலளித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை கொலீஜியம் அமைப்புத்தான் தற்போது பரிந்துரைக்கிறது. இது குறைபாடுடையது என்ற விமர்சனம் அனைத்துக் கட்சியினருமே முன்வைக்கக் கூடி யதுதான். அதனால்தான், 2014-ஆம் ஆண்டு, தேசிய நீதிபதிகள் நியமன ஆணை யத்தை (National Judicial Appointments Commission - NJAC) ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தபோது, அந்த மசோதா மக்களவையில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. மாநிலங்களவையிலும் ஒரே ஒரு எதிர்ப்பு மட்டும் பதிவானது.
ஆனால், இந்த ஆணையத்தை உச்ச நீதி மன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த 2015-ஆம் ஆண்டு ரத்து செய்து விட்டது. மோடி அரசும், இந்த தடையை விலக்குவதற்கான சட்ட ரீதியான முயற்சிகளை செய்யவில்லை. மாறாக, ஏட்டிக்குப் போட்டி வேலையில் இறங்கி விட்டது. கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளின் நியமனத்திற்கு ஒப்புதல் அளிப்பதில்லை என்ற நிலையை மேற்கொண்டு வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் மக்கள்தானே என்ற அக்கறை மோடி அரசுக்கு சிறிதும் இல்லை. இதனை சாமர்த்தியமாக மறைத்து, எங்களுக்கு அதிகாரம் என்று தப்பிக்கிறது. மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பதவி களுக்கு 10 பேர் அடங்கிய பட்டியலை கொலீஜி யம் அண்மையில் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை செய்து அனுப்பியது. இதில் 2 பேருக்கு மட்டும் ஒப்புதல் வழங்கிய ஒன்றிய அரசு, மற்ற 8 பேரையும் நிராகரித்தது. இதேபோல, கடந்த ஆண்டு 11 நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலீஜியம் வழங்கிய பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. அதிகாரம் இல்லாமலா, இவற்றையெல்லாம் மோடி அரசு செய்தது. நீதிபதிகள் நியமனத்திற்கு கொலீஜியம் அமைப்புதான் ஒரே தீர்வு என்று உச்ச நீதிமன்ற மும் கூறவில்லை. அண்மையில், இதுதொடர் பாக பேட்டி ஒன்றை அளித்திருந்த உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், “மாற்றுத் தீர்வை முன்வைக்கா மல், வெறுமனே கொலீஜியம் முறையை விமர்சிப்பதால் எந்தப் பயனும் இல்லை” என்பதை ஒன்றிய அரசுக்கு சுட்டிக்காட்டினார். “ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் முழுமை யானது அல்ல; அதற்கு கொலீஜியமும் விதிவிலக்கல்ல!” என்று தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டும் புரியும் மொழியிலேயே கூறினார். ஆனால், கொலீஜி யத்திற்கு மாற்றான ஆக்கப்பூர்வ நடவடிக்கை கள் எதையும் எடுக்காத சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, 5 கோடி வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக வெறுமனே கவலைப்பட்டுள்ளார்; கண்ணீர் விட்டுள்ளார்.
“மிகச் சிறந்த, இந்தியாவின் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கக் கூடிய வழக்கறி ஞர்களை பரிந்துரைக்குமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியையும், உயர்நீதிமன்றங் களின் தலைமை நீதிபதிகளையும் அரசு தொடர்ந்து கேட்டு வருகிறது. ஆனால், தற்போ தைய கொலீஜியம் முறை, நாடாளுமன்றத்தின் உணர்வுகளையோ அல்லது மக்களின் உணர்வு களையோ பிரதிபலிக்கவில்லை. இந்த விவ காரத்தில் நான் அதிகம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அப்படித் தெரிவித்தால், அரசு நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுவதாகக் கருத நேரிடும். ஆனால், நீதிபதிகளை தேர்வு செய்யும் அதிகாரம் அரசுக்குத்தான் உள்ளது. 1993-இல்தான் இது மாற்றப்பட்டது. கொலீஜியம் நடைமுறையை மாற்றாவிட்டால், காலிப் பணி யிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்” என்றும் பயமுறுத்துகிறார். நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் கொலீஜி யம் முறை வெளிப்படைத்தன்மை கொண்ட தாக இல்லை என்பதை யாரும் இங்கே மறுக்க வில்லை. அதனால்தான் அதனை ஏற்க முடி யாது என்று கூறுகின்றனர். அதேநேரத்தில், ஒன்றிய பாஜக அரசு கொலீஜியத்திற்கு எதிராகப் பேசுவது நல்ல நோக்கத்தில் அல்ல என்பதும் மறைக்க முடியாத உண்மை. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகவும், பாஜக மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கினார்கள் என்பதற்காகவே, நீதி பதி அகில் குரேஷி, மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகாமல் தடுக்கப்பட்டார். நீதிபதி கே.எம்.ஜோசப் உச்ச நீதிமன்ற நீதிபதி யாவது தாமதிக்கப்பட்டு, சீனியாரிட்டி இழந்தார். டாக்டர் எஸ். முரளிதர் சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக முடியாமல் இப்போதுவரை தடுக்கப்பட்டு உள்ளார். அதேபோல பாபர் மசூதி வழக்கு, ரபேல் ஊழல் வழக்குகளில் பாஜக-வுக்கு சாதகமாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், பணி ஓய்வுக்குப் பிறகு, நிய மன எம்.பி. ஆக்கப்பட்டதையும் இந்த நாடு கண்டது.