புதுதில்லி, ஜூன் 19- பூமியில் இருந்து மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நாம் வாழும் பூமி 1993 மற்றும் 2010 ஆண்டுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 80 சென்டிமீட்டர் கிழக்கே சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக பூமியின் காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சி தகவலில் 1993 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மட்டும் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீர் மனிதர்களால் உறிஞ்சப்பட்டுள்ளது. இது 6 மி.மீட்டருக்கும் அதிகமான கடல்மட்ட உயர்வுக்கு சமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைவது பூமியின் சுழற்சியை மாற்றுவதாக 2016ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். ஆனால் தற்போதுவரை இந்த சுழற்சி மாற்றங்களுக்கு நிலத்தடி நீரின் குறிப்பிட்ட பங்களிப்பு ஆராயப்படவில்லை. பூமியின் சுழற்சி பெரிதும் மாறியுள்ளது, இதன் மூலம் பூமியின் பல்வேறு பகுதியில், காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதில் நிலத்தடி நீர்மட்டத்தின் குறைவு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த முழுமையான தரவுகள் இல்லை எனவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்க பல்வேறு நாடுகள் பல திட்டங்களை தீட்டுவதன் மூலம் பூமியின் சுழற்சி மாற்றத்தை மாற்ற முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.