திருப்பூர், மார்ச் 30– மாற்றுத்திறனாளிகளை பணி அமர்த்தி உள்ள நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் பாராட்டு சான்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் (அமலாக்கம்) சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 20 மற்றும் அதற்கு மேல் பணியாளர்களை பணி அமர்த்தி உள்ள அனைத்து நிறுவனங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு கொள்கைகளை மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-ன் படி உருவாக்க வேண்டும். அவர்களுக்கான பணியிடங்களை கண்டறிந்து குறைந்தது 5 சதவீதம் பணி வாய்ப்பு மற்றும் நியமனம் வழங்க வேண்டும். 20 பேருக்கு மேல் பணியாளர்களை பணி அமர்த்தி உள்ள அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள ‘கூகுள் சீட்’ படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆய்வின்போது மாற்றுத்திறனாளிகள் கடைகள், நிறுவனங்களை அணுகுவதற்கான சாய்வு தளம், வாகனம் நிறுத்துமிடம், கழிவறை போன்ற வசதிகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். அதிக மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களை கண்டறிந்து, மாற்றுத்திறனாளிகளை பணி அமர்த்தி உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங் கள் மருத்துவமனைகளுக்கு சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் பாராட்டு சான்று வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.