states

நீதிபதி ரோகிணி ஆணைய பதவிக் காலம் 13-ஆவது முறையாக நீட்டிப்பு!

புதுதில்லி, ஜூலை 7 - ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) வழங்கப்பட்டு வரும் 27 சதவிகித இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடா்பாக ஆய்வு செய்வதற்கு அமைக்கப் பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக் காலத்தை,  ஒன்றிய அரசு 13-ஆவது முறையாக நீட்டித்துள்ளது. ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு  அளிப்பது தொடா்பான விவகாரத்தை ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிப்பதற்காக அரசியல் சாசனப் பிரிவு  340-இன் கீழ் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி நீதிபதி ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பதவிக் காலம் இதற்கு முன்பு  12 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், இதற்கு மேலும் கால நீட்டிப்பு செய்யப்படாது; “ரோகிணி ஆணையம் கால நீட்டிப்பு எதையும் ஒன்றிய அரசிடம் கோரவில்லை. ஜூலை  மாத இறுதியில் தனது அறிக்கையை ஆணையம் சமா்ப்பிக்க வாய்ப்புள்ளது” என்று ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சக செயலர்  ஆர். சுப்பிரமணியம் அண்மையில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். இந்நிலையில், “நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக் காலம் 13-ஆவது முறையாக நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளது. ஆணையத்தின் பதவிக் காலத்தை வரும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை  நீட்டிப்பு செய்வதற்கான பரிந்துரைக்கு ஒன்றிய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது” என்று ஒன்றிய அரசின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.