சிக்கமகளூரு, நவ. 21 - யானை தாக்கிய பெண் உயிரிழந்த சம்பவத்தில் அலட்சியமாக நடந்து கொண்ட பாஜக எம்எல்ஏ-வை பொதுமக்கள் அடித்து உதைத்து சட்டையைக் கிழித்துள்ளனர். கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் முடிகெரே தாலுகாவில் உள்ள ஹுல்மனே குந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். விவசாயி. இவரது மனைவி ஷோபா (40). இவர்கள் 2 பேரும் கடந்த சனிக்கிழமையன்று வனப்பகுதியை ஒட்டியுள்ள தங்கள் தோட்டத்திற்குச் சென்று மாடுகளுக்கு புல் அறுத்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று தோட்டத்துக்குள் புகுந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த 2 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். ஆனாலும் அந்த யானை, 2 பேரையும் விடாமல் விரட்டியது. இதில் ஷோபா யானையிடம் சிக்கிக் கொண்டார். அவரை யானை தும்பிக்கையால் தூக்கி வீசியது. பின்னர் அவரைக் காலால் மிதித்தது. இதில் ஷோபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடந்த சில மாதங்களாக ஹுல்மனே கிராமத்தில் காட்டு யானை அட்டகாசம் அதிக மாக உள்ளதாகவும் அதனைத் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால், தொகுதி பாஜக எம்எல்ஏ-வும், கர்நாடக பாஜக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படு கிறது. எனவே, ஷோபாவின் உயிரிழப்பிற்கு மாநில அரசின் அலட்சியம்தான் காரணம் என்று கிராம மக்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். இதனிடையே ஹுல்மனே கிராமத்திற்கு வந்த முடிகெரே தொகுதி பாஜக எம்எல்ஏ குமார சாமியை அவர்கள் பிடித்துக் கொண்டனர். எம்எல்ஏ-விடம் அடுக்கடுக்கான பல கேள்வி களை எழுப்பினர். அவற்றுக்கு குமாரசாமி முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படு கிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஹூல்மனே கிராம மக்கள், திடீரென குமாரசாமி எம்எல்ஏ-வை சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ள னர். அவரை விரட்டி விரட்டித் தாக்கி அவரின் சட்டையை கிழித்துள்ளனர். போலீசார் தடியடி நடத்தி- பெரும் போராட்டத்திற்குப் பிறகே பொதுமக்களிடம் இருந்து எம்எல்ஏ-வை மீட்டுச் சென்றுள்ளனர்.