மதுரை, டிச.7- மணல் கொள்ளையை தடுக்க டாஸ்மாக்கை போல் மணல் விற்பனைக்கு தமிழ்நாடு மணல் கழகம் தொடங்கக் கோரி இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்துள்ளார். இதுகுறித்து இரா.முத்தரசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் சவுடு, உவரி, வண்டல் மண் அள்ள அனுமதி வாங்கி, சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடைபெறுகிறது. அதில், முக்கியமாக வைகை, காவிரி,பாலாறு ஆகிய ஆறுகளில் அதிகப்படியாக சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடை பெறுகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட சட்டவிரோத மணல் குவாரி கள் நடைபெறுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மேலும் வறட்சி மாவட்டங்களான விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்க ளில் சட்ட விரோத மணல் கொள்ளை அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் விவசாயம் பெரும் அளவில் பாதித்துள்ளது. சவுடு மண் அள்ளுவதற்கு அரசிடம் அனுமதி வாங்கி சட்ட விரோதமாக ஆற்று மணல் அள்ளப்படுகிறது. அரசிடம் அனுமதி வாங்கி நடத்தப்படும் மணல் குவாரியை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், அதிகாரிகள் எவ்வித ஆய்வும் நடத்துவதில்லை. எனவே, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதி 1959 இன் படி விதி எண் 38A தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக்கை போல் மணல் விற்பனைக்கு தமிழ்நாடு மணல் கழகம் தொடங்க வேண்டும். அதன் மூலம் மணல் விற்பனை நடைபெற வேண்டும். மேலும் அரசு மற்றும் தனியார் நிலங்களில் சவுடு, உவரி, வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜய குமார் அமர்வு முன்பு புதனன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.