states

img

வாக்குறுதி அளித்த கோரிக்கைகளை நிறைவேற்றுக!

மீன்துறை ஊழியர் சங்க பொதுக்குழு முடிவு மதுரை, அக். 19-  தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியர் சங்கத்தின் 9 ஆவது மாநிலப் பொதுக்குழு அக்டோபர் 19 சனிக்கிழமையன்று மதுரையில் மாநிலத் தலைவர் இரா.நடேசராசா தலைமையில் நடைபெற்றது.  மாநில துணைத்தலைவர் பா.அருள்ராஜ் வரவேற்றார்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் துவக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் த.மகாராஜன் வேலை அறிக்கையும், பொருளாளர் ம.நந்தகுமார் வரவு - செலவு அறிக்கையும் சமர்பித்தனர். இக்கூட்டத்தில் மாநில இணைச்செயலாளர் செ.சுபைராபானு உள்ளிட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மதுரை மண்டல தலைவர் மு.கார்த்திக் நன்றி கூறினார். பொதுக்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  19.02.2024 அன்று மீன்வளம் -மீனவர் நலத்துறை அமைச்சரின் தலைமையிலும் அன்றைய முதன்மை செயலாளர் / மீன்வளம் ஆணையர், மற்றும் மீனவர் நலத்துறை உயர் அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற்ற துறை சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற குறை தீர் கூட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டு நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை மீன்வளம்- மீனவர் நலத்துறை அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மீன்வள முறையில் உள்ள 63 தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.பணி மூப்பு பட்டியலை வெளியிட்ட பின்பு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அனைத்து மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை/ துணை இயக்குநர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவை துவக்கி வைத்து மதுக்கூர் இராமலிங்கம் பேசுகையில், பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு விற்கும் நிலையில் அதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பது இந்த சங்கங்கள்தான். அரசுத் துறையில் உள்ள பணியிடங்களை இன்றைக்கு ஒப்பந்த முறையில் நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு எதிராகவும் சங்கங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன. இங்கு போராடாமல் எதுவும் கிடைக்காது. எனவே சங்கங்கள் தொடர்ந்து தங்களுடைய கோரிக்கைகளுக்காக போராட வேண்டும் என்று பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆ. செல்வம் பேசுகையில் : அரசு மீன்துறையில் நிறைய காலிப் பணியிடங்கள் உள்ளன.அவற்றை நிரப்ப அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து, கடல் பகுதிகளில் மிகப்பெரும் சவால்களை சந்தித்துத்தான் பணியாற்றுகிறார்கள். எனவே அவர்களுடைய பணியிட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு மீன்வள துறையில் உள்ள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார். இதில் மீன்வளத் துறையில் சிறப்பாக பணியாற்றி தமிழக முதல்வரின் கையில் பாராட்டு பெற்ற நபர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.