நாகர்கோவில், ஜுன் 21- மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து, தேச பாதுகாப்பிற்கும், பொதுத்துறை மணல் ஆலைகளுக்கும் பேராபத்து விளைவிக்கும் திருத்த விதிகளை கனிம மணல் சுரங்க சட்டத்தில் ஏற்படுத்த மத்திய பிஜேபி அரசு முனைந்து வருகிறது. அதற்கான கருத்து கேட்பும் நடைபெற்று வருகிறது. அதுகுறித்து மாநில அரசின் சுரங்கத்துறை செயலாளருக்கு சிஐடியு சார்பில் முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடற்கரை பரப்புகளில் கிடைக்கும் கனிம மணலிலிருந்து, அணு ஆற்றல் கொண்ட கனிமங்களை பிரித்தெடுக்கும் தொழில் சுமார் 122 ஆண்டுகள் பழமையானது. ‘மண்ணை பொன்னாக்கும்’ இந்த தொழிலில் துவக்க காலத்தில் வெள்ளைக்கா ரர்களும், ஜெர்மானியர்களும் குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியிலும், திரு-கொச்சியில் சவறா, ஆலுவா ஆகிய இடங்களிலும் பல ஆலைகள் நிறுவி தொழில் செய்து வந்தனர். அணு ஆற்றல் மிகுந்த மணற்கனிமங்களின் கேந்திரமான பயன்பாட்டினை உணர்ந்த ஒன்றிய அரசு 1957இல் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் ஒழுங்காற்று சட்டம் இயற்றி, இத்தொழிலில் அரசின் ஏகபோக உரிமையை நிலைநிறுத்தி தனியார்களை அதிலிருந்து விலக்கி விட்டது. இந்த சட்டத்தின் (எம்.எம்.டி.ஆர் சட்டம்) ‘பி’ பிரிவில் 12 வகை அரிய சக்தி வாய்ந்த மணல்களை பட்டியலிட்டு, இவற்றை வெட்டி எடுத்து, பிரித்து, தனி தாதுக்களாக வர்த்தகம் செய்யும் உரிமை அரசுகளுக்கே உண்டு என்று வரையறையும் செய்யப்பட்டது. இதனால், ஒன்றிய மாநில அரசுகள் அதிக வருவாய் பெற்றிட வும், அந்நிய செலவாணி ஈட்டிடவும் வழிவகை செய்யப்பட்டது.
தனியாருக்கு அனுமதியை தடுக்க பரிந்துரை
இந்நிலையில் 1998இல் பொறுப்பேற்ற அரசு இந்த தொழிலில் தனியாரை தாராளமாக அனுமதித்தது. அதன் விளைவாக தனியார்கள் நடத்திய ‘சதுரங்க வேட்டையால்’ மணவாளக் குறிச்சி ஐ.ஆர்.இ.எல், கேரளா, ஒடிசாவில் உள்ள ஆலைகளும் தாது மணல் கிடைக்காமல் திணறும் நிலை ஏற்பட்டது. தனியார்கள் நடத்திய பல்லாயிரம் கோடிகளின் முறைகேடுகள், கனிமக் கொள்ளை குறித்து விசாரிக்க நிய மிக்கப்பட்ட விசாரணை கமிஷன் தனியாரை அனு மதிப்பதை தடுத்திட பரிந்துரைத்தது. அதை தொடர்ந்து, அணு ஆற்றல் மிக்க கனிம மணல் சுரங்கத் தொழிலில் அரசு ஆலைகளை தவிர தனியாருக்கு உரிமம் வழங்குவதை தடை செய்து சட்ட விதிகளும் கொண்டு வரப்பட்டது. அதன்படி 8 வகை கனிமங்களை குறிப்பாக அணு ஆற்றல் மிக்கவையும், விண்வெளி ஆராய்ச்சி கருவிகள், மின்சாரம், தகவல் தொழில் நுட்பம், செய்தி தொடர்பு, மின்சக்தி, மின்கலன்கள் மற்றும் முக்கியமாக அணு மின்நிலையங்களில் பயன்படும் கனிமங்கள் ஆகியவற்றை தனியார் கையாளக் கூடாத வகையில் ‘பி’ பட்டியலில் இணைக்கப்பட்டது.
அரசு நிறுவனங்கள் மூடும் நிலை ஏற்படும்
தற்போது இந்த கனிமங்களை தனியாரும் கையாளும் விதத்தில் ‘பி’பட்டியலிலிருந்து ‘டி’பட்டியலுக்கு மாற்றுவதற்கான திருத்தங்களை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வருகிறது. இந்த முடிவால் இப்பணியை மேற்கொண்டு வருகின்ற குமரி மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரே ஒன்றிய அரசு தொழிற்சாலை ஐ.ஆ.இ.எல், கேரளத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் கேரளா மினரல்ஸ் அண்ட் மெற்றல்ஸ், திரு விதாங்கூர் டைட்டானியம் புரோடக்ட்ஸ் லிட், ஒடிஸா மாநிலத்தில் சத்ரபூரில் செயல்படும் பழமையான ஆலை ஆகியவை மீண்டும் கடல் மணல் கிடைக்காமல் மூடப்படும் அபாயம் ஏற்படுத்தப்படுகிறது. மட்டுமன்றி அணுத்திறன் வாய்ந்த இந்த கனிமங்கள் தனியார் கைகளுக்கு மாறினால் அவை தவறானவர்களுக்கு கைமாறி தேசத்தின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தல்க ளுக்கு உள்ளாகும். எனவே உத்தேசிக்கப்பட்டுள்ள மேற்படி திருத்தங்களை கைவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.