தூத்துக்குடி எஸ்பி பாராட்டு தூத்துக்குடி, ஆக.19- தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 561 இடங்களில் இருந்த சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்காக கிராம மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் ‘‘மாற்றத்தை தேடி’’ என்ற சமூக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று (ஆக.19) தூத்துக்குடி உட்கோட்டத்தில் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பிள்ளைவிளையில் ஒரு மின்கம்பத்திலும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜம்புலிங்காபுரம் பகுதியில் 13 மின் கம்பங்களிலும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 96 இடங்களிலும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 69 இடங்களிலும், மணியாச்சி உட்கோட்டத்தில் 27 இடங்களிலும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 48 இடங்களிலும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 57 இடங்களிலும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 62 இடங்கள் என மொத்தம் 373 இடங்களில் ஒரே நாளில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தவர்கள் மற்றும் காவல்துறையினர்
முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் சாதிய அடையாளங்களை அழித்தனர். இதுவரை மொத்தம் 561 இடங்களில் இருந்த சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சாதிய அடையாளங்களை தாமாக முன்வந்து அழித்த கிராம மக்களை மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.