சென்னை,மே 11- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவோம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மறுதலிப்பது கண்டனத்திற்கு உரியது என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கூறியுள்ளது. கழகத்தின் மாநிலக்குழு சார்பில் தலைவர் இரா.பெருமாள்சாமி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் : மு.க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. அதே வேளையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்று வாக் குறுதி அளித்து விட்டு தற்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் சனிக்கிழமையன்று சட்டப்பேரவை யில் பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்துவது சாத்தியமற்றது என்று கூறி யுள்ளார். இது ஆசிரியர் மற்றும் அரசு ஊழி யர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பழைய பென்சன் திட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியருக்கு ஆண்டிற்கு அரசு ரூ.2 லட்சம் செலவழிப்பதாகவும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ரூ.50 ஆயிரம் தான் செலவாகிறது என்று கூறுவது சரியான அணுகுமுறை அல்ல, மேலும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று தேவையுள்ள மற்றும் கூடுதல் பணியிடங்களுக்கு மாறுதல் பெற்றுச் சென்ற சுமார் 3000 ஆசிரியர்களின் விபரங்களை ஐஎப்எச்ஆர்எம்எஸ்-ல் பதி வேற்றம் செய்ய இயலவில்லை. கடந்த மார்ச் 25 மற்றும் ஏப் 20 ஆகிய தேதிகளில் பள்ளிக்கல்வி ஆணையரிடம் இது குறித்து முறையிட்டுள்ளோம். இருப்பினும் மாறுதல் பெற்று சென்ற ஆசிரியர்கள் தங்களுக்கான ஊதியத்தை பெற முடியாத நிலை உள்ளது. ஆட்சி மாற்றத்தால் நல்ல விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கையை அமைச்சரின் அறிவிப்புக்களும் கேள்விக்குறியாக்கும். தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் சார்பில் கேட்டுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.