states

தீக்கதிர் விரைவு செய்திகள்

‘தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம்: தமிழகம், மே.வங்கத்திற்கு நோட்டீஸ்

இஸ்லாமியர்கள் மீது வன்மத்தை கொட்டும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த பின்னணியில், அப்படத்தைத் திரையிட மேற்குவங்க அரசு தடை விதித்தது. தமிழகத்தில் திரையரங்க உரிமையாளர்களே படத்தைத் திரையிடுவதை நிறுத்தி விட்டனர். இதனையடுத்து, மேற்குவங்கத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வெள்ளி யன்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக வரும் புதன்கிழமைக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு, மேற்குவங்க அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மணீஷ் சிசோடியா மீதான சிபிஐ காவல் ஜூன் 2 வரை நீட்டிப்பு!

தில்லியில் மதுபானக் கொள்கை வகுப்பதில் ஊழல் செய்துள்ளதாக கூறி, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. பிப்ரவரி 26-ஆம் தேதி அவரைக் கைது செய்துடன், காவலில் எடுத்தும் விசாரித்து வந்தது. இதனிடையே, இதே விவகாரத்தில் அமலாக்கத்துறையும் கைது செய்து காவலில் எடுத்தது. இந்நிலையில், மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமையன்று தில்லி ரோஸ்  அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கான சிபிஐ காவலை ஜூன் 2 வரையும், அமலாக்கத்துறை காவலை மே 23 வரையும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர்கள் அன்பால்தான் ஆள்கிறார்களாம் : தமிழிசை 

தில்லி அரசு தொடர்ந்த வழக்கில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் நிர்வாகத்தில் அதிகாரம்; ஆளுநர்களுக்கு அது இல்லை”  என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பற்றி, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் ஒவ்வொரு விதமானது. தில்லி அரசுக்கான வழிமுறையை சொல்லி இருக்கிறார்கள். இந்த தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது” என்று கூறியிருப்பதுடன், “ஆளுநர்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள் என்று நாங்கள் சொல்வதில்லை. முக்கியமாக நான் சொல்வதில்லை. அன்பால்தான் ஆள்கிறோம்” என சமாளித்துள்ளார்.

மக்களின் பிரச்சனை பஜ்ரங் தளமல்ல; விலைவாசிதான் : டி.கே சிவகுமார்

“கர்நாடகத் தேர்தலின்போது, உள்ளூர் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது என்று எங்கள் தலைவர்கள் முடிவு செய்தனர். அவர்களோ (பாஜக) வகுப்புவாத கோணத்தில் மக்களைப் பிரிக்க முயன்றனர். நாங்கள் அதை செய்யவில்லை. ஊழலற்ற அரசாங்கம், வளர்ச்சி சார்ந்த அரசு, சிறந்த பெங்களூரு மற்றும் உலகளாவிய கர்நாடகத்திற்கான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய அரசாங்கம் என்பதையே கர்நாடக மக்கள் நம்புகிறார்கள். ஊடகங்கள் பஜ்ரங் தள் பிரச்சனையை எடுத்தன. ஆனால் அது பிரச்சனை அல்ல. விலைவாசி உயர்வுதான் மக்களின் பிரச்சனை. பிற வட இந்திய மாநில மக்களைப் போல் கர்நாடக மக்களை முட்டாளாக்க முடியாது” என்று கர்நாடக பாஜக தலைவர் டி.கே. சிவகுமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தில்லி சேவைகள் துறை செயலாளரை பணிநீக்கிய கெஜ்ரிவால்!

“ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது; துணைநிலை ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை” என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், “எங்களது கைகள் கட்டப்பட்டு நீந்துவதற்காக தண்ணீரில் வீசப்பட்டோம். ஆனால், எங்களால் மிதக்க முடிந்ததால் தடைகள் வந்த பொழுதும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியைப் பெற்றுள்ளோம்” என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தீர்ப்பை வரவேற்றிருந்தார். அத்துடன், நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான சில மணி நேரத்திலேயே தில்லி சேவைகள் துறை செயலாளரை பணிநீக்கம் செய்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை நிலைநாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பாஜக-வுக்கு பெரிய பாடம் : ராகவ் சத்தா கருத்து

“தில்லி அரசு அதிகாரிகள் மீது அதிகாரம் செலுத்த தில்லி அரசாங்கத்துக்கு உரிமை உண்டு. மக்களாட்சியில் உண்மையான நிர்வாக அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கே உள்ளது” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், “ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு இடையே அரசியலமைப்பு வழங்கியுள்ள இந்த சிறந்த அதிகார சமநிலையை சீர்குலைக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, பாஜக-வுக்கு  ஒரு பெரிய பாடம்” என்று ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை: நவீன் பட்நாயக் பேட்டி

தில்லிக்கு வியாழக்கிழமை வருகை தந்த ஒடிசா முதல்வரும், பிஜூ ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக், மாநில விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். சுமார் 20-25 நிமிடங்கள் இச்சந்திப்பு நடைபெற்றது. அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பட்நாயக்கிடம், மக்களவைத் தேர்தலில் பிஜூ ஜனதாதளம் கட்சி தனித்துப் போட்டியிடுமா? என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு, ‘அது எப்போதும் நிகழ்வதே’ என்று அவர் பதிலளித்திருக்கும் அவர், மேலும், “நிதீஷ் குமாருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது” என்றும், “இப்போதைய சூழலில் தேசிய அளவில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

‘தாடி வளர்ப்பதால் மட்டும் மோடி, ரவீந்திரநாத் தாகூராகி விட மாட்டார்’

தாடி வளர்ப்பதால் மட்டும் நீங்கள் ரவீந்திரநாத் தாகூர் ஆக மாட்டீர்கள் என்று பிரதமர் மோடியை திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவரும், மேற்கு வங்க அமைச்சருமான சஷி பஞ்சா மறைமுகமாக தாக்கியுள்ளார். “உங்கள் எல்லோருக்கும் தெரியும், நான் பெயர் சொல்ல மாட்டேன், ஒருவர் நீண்ட தாடி வளர்த்து தேர்தல் முடியும் வரை வெட்ட மாட்டார். எனவே தாடி வளர்ப்பதால் மட்டும் அவர் ரவீந்திரநாத் தாகூர் ஆகிவிட மாட்டார்” என்று அவர் சாடியுள்ளார். இந்நிலையில், உங்களின் முதல்வர் (மம்தா பானர்ஜி) பணத்திற்காக பிச்சை எடுக்கும்போது, எங்கே புறக்கணிக்கப்பட்டு விடுவோமோ என்று பயப்படுகிறீர்களா..?” என்று பாஜக எம்எல்ஏ அக்னிமித்ரா பால் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு இயல்பை விட வெயில்அதிகரிக்கும்

சென்னை, மே 12- தமிழ்நாட்டில் 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து  வெளியிட்ட அறிக்கை வருமாறு:- தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவிய மோக்கா புயலானது தீவிர புயலாக  வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மிகத்தீவிர புயலாக மத்திய மற்றும் அதனை  ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி களில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார்  530 கி.மீ மேற்கு-வடமேற்கே நிலைகொண் டுள்ளது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதி களில் மேலும் வலுப்பெற்றும் மே 14 நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை 15 முதல் 160 கி.மீ வேகத்திலும் இடையிடையே 175 கி.மீ வேகத்திலும் கடக்கக்கூடும். இதன் காரணமாக,மே 13 முதல் 16 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 13 முதல் மே 16 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். மே 14, 15, 16  ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து தென்காசி வழியாக கேர ளாவுக்கு கனிமங்களை கொண்டு செல்ல 10  சக்கரங்களுக்கு மேல்  உள்ள கனரக வாக னங்களுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், புளியரை சோதனைச் சாவடி யில் கண்காணிப்பு தீவி ரமாக்கப்பட்டுள்ளது.

கார் சீட் பெல்ட், அலாரம் ஸ்டாப்பர் க்ளிப்களை ஆன்லைனில் விற்ப னை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.