விசாகப்பட்டினம் இரும்பு எஃகு ஆலையை தனியாருக்கு தாரை வார்ப்பது என 2021 ஜனவரி 27 அன்று மோடி அரசின் அமைச்சரவை முடிவு செய்தது. அன்று துவங்கிய அந்த ஆலை ஊழியர்களின் போராட்டம் விசாகப்பட்டினம் மக்க ளின் போராட்டமாக, ஒட்டுமொத்த ஆந்திர மக்களின் போராட்டமாக பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது. இந்த மாபெரும் மக்கள் இயக்கம் ஆயிரமாவது நாளை நோக்கி வெற்றிகரமாக நடைபோடுகிறது. 966ஆம் நாளான அக்டோபர் 5 அன்று அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் பேரணி நடத்தியது. அப்பேரணியில் பங்கேற்று உரையாற்றினேன். விசாகப்பட்டினம் உருக்காலை தொழிலாளர் வர்க்கம் இந்த மகத்தான போராட்டத்தின் மூலம் பொதுத்துறை காக்கும் எழுச்சிக்கு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வழிகாட்டுகிறது.