தென்காசி, மே 25 சங்கரன்கோவில் அருகே பள்ளி வேன், கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பந்தப்புளி ரெட்டியபட்டியை குருசாமி (45) குருசாமியின் மனைவி வேலுத்தாய் (35) மாமியார் உடையம்மாள் (60) குருசாமி மகன் மனோஜ் குமார் (22) , கற்பகவல்லி உள்ளிட்ட 5 பேர் புதனன்று காரில் திருச்செந்தூர் கோயி லுக்கு சென்று விட்டு சங்கரன்கோவில் நோக்கி திரும்பி வந்தனர். காரை மேல ஒப்பனையா புரத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஒட்டி வந்தார். அப்போது சங்கரன்கோவில் கழுகு மலை சாலையில் இயங்கும் தனியார் பள்ளி வேன் பனவடலிசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பனவடலிசத்திரம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஊத்துமலையைச் சேர்ந்த ஆடுமேய்க்கும் தொழிலாளி தங்கம், திரும்பும் போது தவறி கீழே விழுந்தார். அவர் மீது மோதாமல் இருக்க வேனைத் திருப்பிய போது எதிரே வந்த கார் பயங்கரமாக வேன் மீது மோதியது.இதில் காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குருசாமி, வேலுத் தாய், உடையம்மாள், மனோஜ் குமார், ஓட்டுநர் அய்யனார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். படு காயமடைந்த கற்பகவல்லி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இதில் தனியார் பள்ளி மாணவிகள் 2 பேர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இச்சம்பவம் தொடர்பாக பனவடலி சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சங்கரன் கோவில் காமராஜ் நகரை சேர்ந்த பள்ளி வேன் ஓட்டுநர் ஆறுமுகச்சாமி, ஊத்துமலை யை சேர்ந்த தங்கம் ஆகியோரை அதி வேகமாக செல்லுதல் அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பள்ளி விடுமுறையில் இருக்கும் போது தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடை பெற்றதாகக் கூறப்படுகிறது.இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார், மெட்ரிக் பள்ளிகள்) ராமசுப்பு ஆகியோர் விசாரணை செய்தனர்.