states

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

சென்னை, மார்ச் 13- தமிழ்நாடு, புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், 8 லட்சத்து 75 ஆயிரம் பேர்  தேர்வு எழுதினர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திங்களன்று (மார்ச் 13) துவங்கியது. இந்த தேர்வு வரும் ஏப்ரல் 3ஆம் தேதி  வரை நடைபெறவுள்ளன. 3,225 தேர்வு மையங்களில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டு தனித் தேர்வர்களுடன் சேர்த்து  மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரம்  மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதினர். 46,870 ஆசிரியர்கள் கண் காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். சென்னை மாநகரில் 180 தேர்வு  மையங்களில், மொத்தம் 45,982 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட  ஆட்சியர் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரியிலும் 40  மையங்களில் 23,747 தனித்தேர்வர் களும், 6 மாற்றுத் திறனாளிகளும், 90 சிறைக்கைதிகளும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மலர் தூவி தேர்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து, 11ஆம்  வகுப்பு பொதுத் தேர்வு செவ்வா யன்று (மார்ச் 14) தொடங்குகிறது. தமிழ் நாட்டில் 3,224 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரம் மாணவர்கள் இந்த  தேர்வை எழுதவுள்ளனர். இவர்களில் 5,338 தனித் தேர்வர்களும், 4 மூன்றாம்  பாலினத்தவர்களும், 125 சிறைக் கைதிகளும் அடங்குவர். 50,674 பேர் எழுதவில்லை இந்நிலையில் முதல்நாள் தமிழ்  மொழித்தேர்வை 50,674 பேர் எழுத வில்லை என பள்ளிக்கல்வித்துறை  தெரிவித்துள்ளது. தேர்வு எழுதி முடித்து வெளியே வந்த மாணவ, மாணவிகள், மொழித்தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாகவும், ஒரு  மதிப்பெண் வினாக்கள் மட்டும் சற்று  கடினமாக இருந்தது என்றும் கூறினர்.