states

இந்தியாவில் வீணடிக்கப்படும் 7.4 கோடி டன் உணவு!

உ லக உணவு தானிய உற்பத்தியில் 8 சதவிகிதம் அதாவது 93.1 கோடி டன் உணவு வீணாவதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆர்) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7.4 கோடி டன் உணவு தானியம் வீணடிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இது, 2022-23-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் 22 சதவிகிதம் என்று கூறப்படுகிறது.

தெற்காசியப் பிராந்தியத்தில் உணவு இழப்பை தடுப்பது தொடர்பாக நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் இந்த தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஜெர்மனியின் துநென் இன்ஸ்டிடியூட் இணைந்து மூன்று நாள் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன.

இந்த கருத்தரங்கின் தொடக்க நாளன்று ஐசிஏஆர் தலைவர் ஹிமான்ஷு பதக் கூறுகையில், “உணவு வீணாவதற்கு, சேமிப்பு வசதிகள் இல்லாததே முக்கிய காரணம். புள்ளிவிவரங்களின் மூலம் அறிந்துகொண்டதன் அடிப்படையில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதில் காட்டும் கவனத்தை விட அதனைப் பாதுகாப்பதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது. ஏனெனில், உணவு வீணாவது பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தனிநபர் ஆரோக்கியம், கால நிலையையும் பாதிப்பதாக அமைகின்றன’’ என்றார்.

அறுவடைக்குப் பிந்தைய இழப்பு மற்றும் உணவுக் கழிவுகள் என்பது நாடுகளின் புவியியல் தன்மையின் அடிப்படையில் வேறுபடுகின்றன. இது பெரும்பாலும், பயிர்கள், பொருட்கள், சேமிப்புக் காலம், கால நிலை, தொழில்நுட்ப தலையீடுகள், மனிதர்களின் பழக்கவழக்கம் மற்றும் மரபு ஆகியவற்றை சார்ந்தவையாக உள்ளன.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (யுஎன்இபி) உணவு கழிவு குறியீட்டு அறிக்கை 2021-இன்படி, உலகளவில் உணவுகள் கழிவுகளாக வீணடிக்கப்படுவதற்கு குடும்பங்கள், உணவு சேவைகள், சில்லறை விற்பனை நிலையங்கள் காரணங்களாக உள்ளன.

உலகளவில் ஒவ்வொரு தனிநபரும் ஆண்டொன்றுக்கு 121 கிலோ உணவை நுகர்வு நிலையில் வீணடிக்கின்றனர். இதில், 74 கிலோ உணவுகள் வீடுகளில் மட்டுமே வீணடிக்கப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் தனி நபர் ஒருவர் ஆண்டுக்கு 50 கிலோ உணவை வீணடிக்கிறார். இருப்பினும், இது தெற்காசியாவிலேயே மிகவும் குறைந்தபட்ச அளவு என்றும் கூறப்படுகிறது.

இதுதவிர 28 சதவிகித விவசாய நிலங்கள் ஒருபோதும் சாப்பிட முடியாத அல்லது வீணடிக்க முடியாத உணவுகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.