states

வேங்கைவயல் சம்பவம்: 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

புதுக்கோட்டை, ஜூன் 30- மரபணு சோதனைக்கு உட்படுத்தக் கோரிய வேங்கைவயலைச் சேர்ந்த 8 பேர், புதுக்கோட்டை எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராயினர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியல் சமூகத்தினரின் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், 11 பேருக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் அனுமதி பெற்றனர். இவர்களில் 3 பேர் மட்டுமே மரபணு பரிசோதனைக்கு சம்மதித்து ரத்த மாதிரிகளைக் கொடுத்தனர். மீதமுள்ள 8 பேர் சோதனைக்கு வரவில்லை. அதேநேரத்தில், பாதிக்கப்பட்ட எங்களிடம் எந்தக் கருத்தையும் கேட்காமல் எங்களிடமே மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர்களின் கருத்தைக் கேட்டு மரபணு பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட அந்த 8 பேரின் கருத்தைக் கேட்கும்  வகையில் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்லி கடந்த ஜூன் 28 அன்று அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராயினர். சிபிசிஐடி போலீசார் மரபணு சோதனை நடத்தக் கோருவதை அவர்கள் 8 பேருக்கும் தெரிவித்த நீதிபதி எஸ்.ஜெயந்தி, உங்களின் கருத்தை சனிக்கிழமை ஆஜராகி தெரிவிக்கலாம் என்றார்.