மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டீஸ்கார் மாநில 7ஆவது மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டீஸ்கார் மாநில 7ஆவது மாநாடு, டிசம்பர் 21-22 தேதிகளில் சட்டீஸ்கார் மாநிலத்தில் தொழிற்சாலைகள் நிறைந்த கோர்பா மாவட்டத்தில் நடைபெற்றது.
மாநாட்டில் வரவேற்புரையாற்றிய சிஐடியு தலைவர் வி.எம்.மனோகர், கோர்பாவில் கட்சியால் நிலத்திற்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களைக் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் தொழிலாளர்கள்-விவசாயிகள் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
பிரதிநிதிகள் மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தபன்சென் துவக்கவுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“நாடு தழுவிய அளவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம், நாட்டின் அரசியல் நிகழ்ச்சிநிரலையே மாற்றி அமைத்திருக்கிறது. இந்தப் போராட்டமானது, நாட்டில் ஒன்றிய ஆட்சியாளர்களின் உதவியுடன் கார்ப்பரேட்டுகள் மேற்கொண்டுவரும் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்பதைக் காட்டியிருக்கிறது. இத்தகைய தொழிலாளர்-விவசாயி ஒற்றுமையை நாட்டில் மேலும் வலுப்படுத்த வேண்டியிருக்கிறது. ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வெகுஜனப் போராட்டங்களைத் தீவிரப்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்வது ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டின் கடமையாகும். ஏனெனில் வர்க்கப் போராட்டம் ஒன்றுமட்டுமே சமூகத்தில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆயுதமாகும்.
நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான போராட்டத்திலும், தனியார்மயத்திற்கு எதிரான போராட்டத்திலும் கடந்த காலங்களில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது அத்தகைய போராட்டங்கள் இப்போது அரசியல் எல்லைக்கு வந்துவிட்டது. வரவிருக்கும் அனைத்துத் தேர்தல்களிலும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாஜக தோற்கடிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.”
இவ்வாறு தபன்சென் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியப்பிரதேச மாநில செயலாளர் ஜஸ்வீந்தர் சிங் மாநாட்டினை வாழ்த்தி உரைநிகழ்த்தினார். அவர் தன்உரையின்போது, ஒன்றுபட்ட மத்தியப்பிரதேச மாநிலத்தில், சைலேந்திர சைலி, எஸ்.குமார், பகதூர் சிங் தாகாத் போன்றவர்கள் கட்சியையும், வெகுஜன அமைப்புகளையும் கட்டி எழுப்பிட மேற்கொண்ட நடவடிக்கைகளை நினைவுகூர்ந்தார்.
பிரதிநிதிகள் மாநாடு
பிரதிநிதிகள் மாநாட்டில் அரசியல்-ஸ்தாபன அறிக்கையை சஞ்சய் பராத்தே தாக்கல் செய்தார். அறிக்கையில், சென்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தபின்னர், மாநிலத்தில் ஜனநாயக இயக்கங்கள் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருக்கின்றன எனச் சுட்டிக்காட்டப்பட்டது. பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் இடையேயுள்ள அரசியல் வித்தியாசங்களையும் முன்னணி ஊழியர்கள் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் அறிக்கையில் ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் மதவெறிக் கொள்கைகளுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி மென்மையான போக்கைப் பின்பற்றிவருவதும் சுட்டிக்காட்டப்பட்டது.
ராமனின் பெயரில் பாஜக மேற்கொண்டுவரும் திட்டங்கள், பழங்குடியினர் பகுதிகளில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு பாஜக மட்டுமல்ல, காங்கிரசும் சேவகம் செய்துவருவதை எவராலும் மறைக்க முடியவில்லை. வன உரிமைகள் சட்டமும், அட்டவணைப்பகுதிகளில் பஞ்சாயத்து விரிவாக்க சட்டம் (Panchayat Extension to Scheduled Areas Act) என்கிற ‘பெசா’ சட்டமும் பழங்குடியினர் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டபோதிலும், அங்கே கார்ப்பரேட்டுகள் இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்காகப் பழங்குடியினர் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. போலீஸ் முகாமுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள் என்பதற்காகவே சில்குர் பகுதியில் பழங்குடியினர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது இதற்குச் சான்றாகும். எனவேதான், காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், இந்துத்துவா பிரச்சாரத்திற்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டியதன் அவசியம் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
அறிக்கையின் மீதான விவாதத்தில் ஒன்பது மாவட்டங்களிலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநில செயலாளர் தொகுப்புரைக்குப்பின் அறிக்கை நிறைவேறியது.
மாநாட்டில் 73 பிரதிநிதிகள் பங்கேற்றனர். 61 பிரதிநிதிகள் 60 வயதுக்குக் கீழானவர்கள். மாநாட்டில் 23 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. சஞ்சய் பராத்தே மீண்டும் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு நான்கு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் யோகேந்திர சர்மா நிறைவுரையாற்றினார்.
(ந.நி.