states

img

கல்வியறிவு பெறாத 1.38 லட்சம் பேருக்கு புதிதாக எழுத்தறிவு... கடந்த 4 ஆண்டுகளுக்குள் சாதனை படைத்த கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் முறையான கல்வியறிவு பெறாத 1 லட்சம் பேருக்கு, எழுத்தறிவு புகட்டி, பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு சாதனை படைத்துள்ளது.

கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டுவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சியில் மொத்தமே 4 ஆயிரத்து 600 பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்த நிலையில், 2016 முதல் 2020 வரையிலான இடது ஜனநாயக முன்னணியின் நான்காண்டு ஆட்சிக்குள் மட்டும் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் புதிதாக எழுத்தறிவு பெற்றுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி மக்கள், மீனவர்கள், விளிம்புநிலை மக்கள் என்பதுடன், புலம்பெயர்ந்து கேரளாவுக்கு வந்த வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கும் எழுத்தறிவிக்கப்பட்டு உள்ளது. 

கடந்த 30 ஆண்டுகளில், 2016 முதல் 2020 வரையிலான காலத்தில்தான் பழங்குடியின மக்கள் அதிகமாக கல்வியறிவு பெற்றுள்ளனர் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. 96 வயது, 105 வயது என வயது முதிர்ந்தவர்கள் கூட எழுத்தறிவு பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.கேரள மாநிலக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் சுயேட்சை அமைப்பான கேரள எழுத்தறிவு இயக்க ஆணையம்(கேஎஸ்எல்எம்ஏ) பல்வேறு எழுத்தறிவு திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்தி, இந்த சாதனையைப் படைத்துள்ளது.கேரள எழுத்தறிவு ஆணையத்தின் திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்தமாகப் பெண்கள் உள்பட ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 608 பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். 

இதில் 4-ஆம் வகுப்பு வரை 24 ஆயிரத்து 148 பேரும், 7-ஆம் வகுப்புவரை 21 ஆயிரத்து 950 பேரும், 10-ஆம் வகுப்பு வரை 64 ஆயிரத்து663 பேரும், 12-ஆம் வகுப்பு வரை 24 ஆயிரத்து 847 பேரும் கல்வி கற்றுள்ளனர்.“கடந்த 1990-களில் எழுத்தறிவு இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் கேரள அரசு தொடக்கநிலைக் கல்விக்கே அதிகமான முக்கியத்துவம் அளித்து, கல்வியறிவு இல்லாத சூழலைக் கொண்டுவர முயன்றது. ஆனால், கடந்த4 ஆண்டுகளாக இடதுசாரி அரசுதான் ஒட்டுமொத்த கல்விக்கான முக்கியத்துவத்தையும் அதிகரித்துள்ளது” என்று கேரள எழுத்தறிவு ஆணையத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.இதேபோல, கேரள எழுத்தறிவு இயக்க ஆணையத்தின் (கேஎஸ்எல்எம்ஏ) இயக்குநர் பிஎஸ். ஸ்ரீகலா கூறுகையில் “ பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள், மீனவ மக்கள், விளிம்புநிலை சமூகத்தில் இருக்கும் மக்கள்ஆகியோருக்கு முக்கியத்துவம் அளித்து சிறப்புத் திட்டங்கள் வகுத்து செயல்படுத்தியதன் காரணமாகவே கல்வியறிவிலும், கல்வித்துறையிலும் இந்த சாதனைகளைச் செய்ய முடிந்தது.வயநாடு மற்றும் பாலக்காடு மாவட்டத்தின் அட்டபாடி பகுதிகளில் கல்வியறிவு போதிக்கச் செய்யப்பட்ட சிறப்புத் திட்டங்கள் மூலம் 12 ஆயிரத்து 968 பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இந்த பகுதிதான் மாநிலத்திலேயே மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்தது. அக்ஸராசகரம் திட்டத்தின் கீழ் 11 ஆயிரத்து 941 பேரும், சங்கதி திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களும் மலையாளம் கற்றுள்ளனர்.நவசேதனா திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 188 பேர் கல்வி கற்றுள்ளனர்” என்ற தெரிவித்துள்ளார்.கேரள அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள்படி, 2011-ஆம் ஆண்டு கணக்கின்படி மாநிலத்தில் 18 லட்சம் பேர் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;