திருவனந்தபுரம், நவ. 1- கேரளாவின் எதிர்கால முன்னேற்றத்திற்கு முக்கியமானதாக இருக்கும் டிஜிட்டல் சர்வே, கேரளா பிறந்த நாளான நவம்பர் 1 செவ்வாயன்று துவக்கப்பட்டது. நான்காண்டுகளில் கேரளாவின் நிலப்பரப்பில் முழுமையான அறிவியல் ஆய்வு நடத்தி விரிவான நில வரைபடம் தயாரிக்கப்படும். திருவனந்தபுரம் தாகூர் திரையரங்கில் மாநில அளவிலான டிஜிட்டல் ரிசர்வ் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். முதற்கட்டமாக 200 கிராமங்கள் கணக்கெடுக்கப்படும். மூன்று ஆண்டுகளில் 400 கிராமங்களில் கணக்கெடுப்பு முடிக்கப்படும். நான்காவது ஆண்டில் 350 கிராமங்கள். துறை ஊழியர்கள் தவிர 1500 சர்வேயர்கள், 3200 உதவியாளர்கள் என 4700 பேர் கணக்கெடுப்புக்காக நியமிக்கப்பட்டனர். ரூ.858.42 கோடி செலவில் எதிர்பார்க்கப்படும் இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.438.46 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோர்ஸ், ஆர்டிகே ரோவர் மற்றும் ரோபோடிக் டோட்டல் ஸ்டேஷன் போன்ற அதிநவீன சர்வே கருவிகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நில உரிமையாளர்கள் முன்னிலையில் மென்பொருள் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தி வரைபடங்கள் தயாரிக்கப்படுகிறது. டிஜிட்டல் சர்வே மற்றும் கணக்கெடுப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் வார்டுகளில் சர்வே சபா அமைத்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முதற்கட்ட கணக்கெடுப்பு நடந்து வரும் 200 கிராமங்களில் சர்வே சபா அமைக்கப்பட்டுள்ளது.