கேரளாவில் கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தர் பதிவியிலிருந்து ஆளுநர் ஆரிப் முகமது கானை கேரள அரசு அதிரடியாக நீக்கியது.
பாஜக ஆட்சி அல்லாத கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களாக இருப்பவர்கள் ஒன்றிய பாஜக அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் இன் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பல அடாவடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கேரளத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான், ஒரு முழு மையான ஆர்எஸ்எஸ் அடிவருடியாகவே மாறிசெயல்படுகிறார். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக பல்வேறு பித்தலாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஒட்டு மொத்த கேரள மக்களையும் அவமதிக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இது கேரள மக்கள் மத்தியில் கடும் அதிருப்த்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பத்திரிகையாளர்கள், வாலிபர்கள் மற்றும் மாணவர்கள் கேரள ஆளுநருக்கு எதிரான போராட்டங்களை துவக்கியிருக்கின்றனர்.
கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் கவுரவப் பொறுப்பு என்ற முறையில் ஆளுநர், ‘வேந்தர்’ என்ற பதவியினை வகித்து வருகிறார். இதனை பயன்படுத்தி பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை பதவியிலிருந்து வெளியேறுமாறு அராஜகமாக கடிதம் அனுப்பினார். இது கேரளாவில் பெரும் பிரச்சனையாக வெடித்தது.
இந்த சூழலில், கடந்த புதனன்று, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கூடிய கேரள அமைச்சரவை வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியது. பூஞ்சி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே கேரள அரசு இந்த முடிவினை மேற்கொண்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. பூஞ்சி ஆணையம், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் ஒரு மாநிலத்தின் ஆளுநர் நியமிக்கப்படுவது என்பது, ஆளுநரின் அரசியலமைப்புச் சட்ட கடமைகளை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் அல்ல என தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், வேந்தர் என்ற பொறுப்பு ஆளுநரிடமிருந்து நீக்கப்படலாம் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டியுள்ள கேரள அமைச்சரவை, மாநிலத்தில் உயர் கல்வித்துறைக்கு அரசு அதிகபட்ச முக்கியத்துவம் அளித்து வரும் பின்னணியில், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் கல்வியிற் சிறந்த அறிஞர்களை நியமிப்பது என முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.
இந்த நிலையில், தற்போது கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தர் பதிவியிலிருந்து ஆளுநர் ஆரிப் முகமது கானை கேரள அரசு அதிரடியாக நீக்கியுள்ளது.