திருவனந்தபுரம், ஆக.3- இந்தியாவிலேயே முதல் டெக்னோபார்க் நிறுவி, இந்தியாவிலேயே முதல் டிஜிட்டல் பல்கலைக் கழகத்தை நிறுவி, நாட்டிலேயே முதல் டிஜிட்டல் அறிவியல் பூங்காவைத் தொடங்கி நாட்டிற்கு கேரளா முன்னுதாரணமாக திகழ்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரம் மங்களபுரத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்கா திறப்பு விழாவில் முதல்வர் மேலும் பேசுகையில், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவுத் தொழில்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் உள்கட்டமைப்பை கேரளா விரைவாகத் தயாரித்து வருகிறது. மனித முன்னேற்றத்திற்கு அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. மாநிலத்தில் நிறுவப்படும் நான்கு அறிவியல் பூங்காக்களில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவும் ஒன்றாகும். தற்போதைய தொழில்நுட்ப அறிவு ஆராய்ச்சி மூலம் புதுப்பிக்கப்பட வேண்டும். கேரளாவின் உயர்தர மனித வளத்தை இதற்காகப் பயன்படுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகத்தைத் தொடங்கி, தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான செயல்பாடுகளில், ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்னுதாரணமாக கேரளா திகழ்ந்தது. இப்பல்கலைக் கழகத்தின் அருகாமையில் டிஜிட்டல் அறிவியல் பூங்கா அமைகிறது. டிஜிட்டல் அறிவியல் பூங்காவுக்கான மொத்த முதலீடு சுமார் 1,515 கோடி ரூபாய். கிஃப்பி-யிலிருந்து 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
3 மாதங்களில் அடிப்படை கட்டமைப்பு
ஏப்ரல் 25 ஆம் தேதி இதன் அடிக்கல் நாட்டப்பட்டது. மூன்றே மாதங்களில் டிஜிட்டல் அறிவியல் பூங்கா அடிப்படை வசதிகளை நிறைவு செய்து செயல்பாட்டை துவக்கியது. இங்கு 2,50,000 சதுர அடி பரப்பளவில் இரண்டு கட்டிடங்கள் அடுத்த ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். அதன் மூலம் பூங்கா முழுமையாக செயல்படும் என்று முதல்வர் கூறினார். நாட்டின் முதல் டெக்னோபார்க் கேரளாவில் 33 ஆண்டுகளுக்கு முன்பு இ.கே.நாயனார் முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டிலேயே முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகத்தைத் தொடங்கி, தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான செயல்பாடுகளில் கேரளா ,முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக அமைந்தது. இந்த பல்கலைக் கழகத்திற்கு அடுத்ததாக டிஜிட்டல் அறிவியல் பூங்கா வரவுள்ளது. உலகம் முழுவதும் அறிவு சார் தொழில்களின் வளர்ச்சியில் பெரும் ஏற்றம் உள்ளது.
எல்.டி.எஃப் அரசு உறுதி
கேரளாவின் முழுமையான வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கேரளாவின் எல்.டி.எஃப் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. டிஜிட்டல் அறிவியல் பூங்காவின் முதல் கட்டமானது, மின்னணு தயாரிப்பு வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள தொழில்கள், ஸ்டார்ட்-அப்களை ஆதரிக்கும் வசதிகளுடன் கூடிய இரண்டு சிறப்பு மையங்களை நிறுவுவதன் மூலம் செயல்படத் தொடங்கும். பூங்கா முழுமையாக செயல்பாட்டிற்கு வந்ததும், டிஜிட்டல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பிற பகுதிகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்படும் என்றும் முதல்வர் கூறினார். உயர் கல்வியின் ஏற்றம், உள்கட்டமைப்பில் தீவிர மாற்றங்கள் கேரளாவின் வளர்ச்சியை வலுப்படுத்தும். டிஜிட்டல் அறிவியல் பூங்கா கேரளாவை அறிவுப் பொருளாதாரம் மற்றும் புதுமை சமூகமாக மாற்றுவதற்கான ஒரு முக்கியமான படியாகும். செயற்கை நுண்ணறிவு மற்றும் சிப் வடிவமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் ஸ்பெயின், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் டிஜிட்டல் அறிவியல் பூங்காவின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. அறிவுசார் தொழில் மற்றும் ஆராய்ச்சியின் வளர்ச்சியிலும், உயர்கல்வித் துறையில் தீவிர மாற்றத்திலும், சிறந்து விளங்கும் மையங்களை உருவாக்குவதிலும் டிஜிட்டல் அறிவியல் பூங்கா பங்கு வகிக்கும் என்று முதல்வர் கூறினார்.