திருவனந்தபுரம், ஜன. 5- ஒடுக்குமுறையாளர்களின் புகலிடமாக பாஜக மாறி வருகிறது என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் சுபாஷினி அலி கூறினார். சமீப நாட்களாக நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் அதிர்ச்சியளிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு திருவனந்தபுரத்தில் ஜனவரி 6 முதல் 9 வரை நடைபெறுவதையொட்டி சங்கத்தின் அகில இந்தியத் தலைவர்கள் மரியம் தாவ்லே, சுபாஷினி அலி மற்றும் மாநில தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுபாஷினி அலி மேலும் கூறியதாவது: அரியானாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் மீது விளையாட்டு பயிற்சியாளர் பாலியல் புகார் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமைச்சர் பதவியை மட்டும் ராஜினாமா செய்தார்.
தில்லியில் இளம் பெண்ணை காரில் இழுத்துச் சென்று கொன்ற சம்பவமும் திகிலூட்டுகிறது. இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்தக் காலத்திலும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் குறையாமல் இருப்பது எவ்வளவு கொடுமையானது என்றார் சுபாஷினி அலி. பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே, ஒன்றிய அரசின் கொள்கைகளால், நாட்டில் பெண்களின் வாழ்வு பரிதாபமாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கு இன்றும் பாதுகாப்பில்லை. சத்துணவு இல்லாமை, சீர்குலைந்த ரேசன் முறை, வேலையின்மை, சம ஊதியம் கிடைக்காத நிலை என பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.