states

img

மாதர் சங்க அகில இந்திய மாநாடு - திருவனந்தபுரத்தில் தியாகச் சுடர்கள் சங்கமம்

திருவனந்தபுரம், ஜன.4- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13 ஆவது அகில இந்திய மாநாடு திருவனந்தபுரத்தில் வெள்ளியன்று (ஜன.6) துவங்க உள்ளது. இதையொட்டி வியாழனன்று தியாகச்சுடர்கள் சங்கமித்தன.  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக கேரள வழக்கத்தின்படி அம்மாநில தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுடர் பயணமும், கொடி பயணமும் கொடி மர  பயணமும் அவற்றின் சங்கம நிகழ்ச்சியும் புத்தரிக்கண்டம் மைதானத்தில் வியாழ னன்று (ஜன.5) மலை நடைபெற்றது. கரமனா தோழர் சாரதாம்மா நினை விடத்தில்  எம்.ஜி.மீனாம்பிகா தலைமையில் கொடி பயணம் துவங்கியது. கே.கே.சைலஜா டீச்சர் கொடியை எடுத்துக் கொடுத்தார். புத்தரிக்கண்டம் மைதானத்தில் டாக்டர் டி.என்.ஸீமா பெற்றுக்கொண்டார். தியாகிகள் சுடர் பயணத்துக்கு எஸ்.புஸ்பலதா தலைமை  வகித்தார்.பி.சதிதேவி எடுத்துக் கொடுத்தார். சி.எஸ்.சுஜாதா பெற்றுக் கொண்டார்.

திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி அருகில் தோழர்.தேவகி வாரியார் நினை விடத்தில் இருந்து பி.அம்பிளி தலைமையில் கொடி மர பயணத்தை சூசன்கோடி துவக்கி வைத்தார். என்.சுன்யா பெற்றக் கொண்டார். அதைத்தொடர்ந்து நடந்த சங்கம பொதுக் கூட்டத்தை சூசன்கோடி துவக்கி வைத்தார்.  கொடியை சீமா ஏற்றி வைத்தார். சுஜாதா நன்றி கூறினார். மாதர் சங்க மாநாட்டையொட்டி கேரளா வின் தலைநகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் மாதர் சங்க அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. நாட்டின் 25 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இருந்து  96,31,116 உறுப்பினர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் 850 பிரதிநிதிகள் வரை ஜனவரி 9 வரை நான்கு நாள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

திருவனந்தபுரம் தாகூர் தியேட்டர் (எம்.சி. ஜோசபின் நகர்) மற்றும் புத்தரிக்கண்டம் மைதானத்தில் (மல்லு ஸ்வராஜ்யம் நகர்) மாநாடு நடைபெறுகிறது. கலாமண்டலம் கல்பித பல்கலைக்கழக வேந்தரும், பிரபல நடனக் கலைஞருமான மல்லிகா சாராபாய் வெள்ளியன்று பிரதிநிதிகள் மாநாட்டையும், முதல்வர் பினராயி விஜயன் 9 ஆம் தேதி பொது மாநாட்டையும் துவக்கிவைக்கின்றனர். ஒரு லட்சம் பெண்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துடன் மாநாடு நிறைவடை கிறது.