மாணவர்களின் சுமையைக் குறைக்கத் திட்டம் கேரளத்தில் அறிமுகமாகும் ‘புத்தகப் பை இல்லா நாட்கள்’! திருவனந்தபுரம், ஜூலை 28 - கேரள அரசுப் பள்ளிகளில், மாதத்தில் 4 நாட்கள், ‘புத்தகப்பை இல்லா நாட்கள்’ திட்டத்தை முன்னெடுப்பது குறித்து பினராயி விஜயன் அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து கேரள மாநில பொதுக்கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “மாணவர்களின் பள்ளிக்கூட பைகள் அதிக எடையுடன் இருப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் பொதுக் கல்வி மீது அக்கறை உள்ளவர்களிடமிருந்து பல்வேறு புகார்கள் மற்றும் பரிந்துரைகள் வந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் மாநி லத்தில் பாடப் புத்தகங்கள் இரண்டு பிரிவுகளாக அச்சிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
எனினும், இன்னும் கூட மாணவர்களின் பள்ளிப் பைகளின் எடை அதிகமாக இருப்ப தாக புகார்கள் வருகின்றன. எனவே, 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிப் பையின் எடை 1.6 கிலோ முதல் 2.2 கிலோ வரையிலும், 10-ஆம் வகுப்பு மாணவர்களின் பள்ளிப் பையின் எடை 2.5 கிலோ முதல் 4.5 கிலோ வரை இருக்கும் வகையில், வழிகாட்டுதல்கள் வழங்க மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இவை தவிர, மாதத்தில் நான்கு நாட்கள் அரசுப் பள்ளிகளில் ‘புத்தகப்பை இல்லா நாட்கள்’ திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.” இவ்வாறு சிவன் குட்டி கூறியுள்ளார்.