குஜராத்தில், போக்குவரத்து விதிகளை மீறினாலும், 7 நாட்களுக்கு அபராதம் வசூலிக்கப்படாது என்று அம்மாநில உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்வி அறிவித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் குறித்த விபரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டது. குஜராத் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இலவசங்கள் கூடாது என்று வாதிடும் பாஜக, அம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பல்வேறு இலவசத் திட்டங்களை தற்போது அறிவித்து வருகிறது. பாஜக மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் ஆண்டுக்கு இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பும் அதில் அடக்கம். இந்நிலையில், குஜராத்தில், போக்குவரத்து விதிகளை மீறினாலும், அக்டோபர் 21-ஆம் தேதி முதல் அக்டோபர் 27-ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு அபராதம் வசூலிக்கப்படாது என்று அம்மாநில உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்வி அறிவித்துள்ளார்.