states

குஜராத்தில் சுயேட்சையாக போட்டியிடும் பாஜக தலைவர்கள் எண்ணிக்கை 19 ஆனது!

காந்தி நகர், நவ. 23 - குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா- வின் பேச்சையும் மீறி, 19 தொகுதிகளில் பாஜக மூத்தத் தலைவர்கள் சுயேட்சை களாக களமிறங்கி இருப்பது, பாஜக-வுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில், தற்போது அமைச்சர்களாக இருக்கும் 6 பேர் உள்பட 42-க்கும் அதிகமானவர்களுக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. இவர்களுக்கான வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது என கட்சி எடுத்த சர்வே கூறிய நிலையில் புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத பாஜக மூத்த தலைவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இவர்களில் பாஜக-வின் பழங்குடியினர் முகமாக இருக்கும் ஹர்ஷத் வாசவா, அரவிந்த் லதானி, சத்ரசிங் குஞ்சாரியா, கேதன் பாய் படேல், பாரத் சாவ்தா, உதய் ஷா, கரண் பரையா ஆகிய 7 பேரை 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து பாஜக தலைமை அண்மையில் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், மேலும் 12 பேர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. இவர்களில் 6 முறை எம்எல்ஏவாக இருந்துவரும் மது  ஸ்ரீவஸ்தவாவும் அடங்குவார். தற்போதைய அறிவிப்பின்படி பத்ரா தொகுதி முன்னாள் எம்எல்ஏ டினு படேல், பயாத் முன்னாள் எம்எல்ஏ தவல்சிங் ஜாலா, குல்தீப்சிங் ரவுல்  (சாவ்லி), கதுபாய் பாகி (ஷெஹ்ரா), எஸ்எம்  காந்த் (லுனாவாடா), ஜேபி படேல் (லுனா வாடா), ரமேஷ் ஸலா (உம்ரேத்), அமர்ஷி ஸலா (கம்பட்), ராம்சிங் தாகூர் (கெரலு), மாவ்ஜி தேசாய் (தனேரா) லெப்ஜி தாக்கூர் (தீசா) ஆகியோர் பாஜக-விலிருந்து நீக்கப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 2-ஆவது கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள 93 தொகுதிகளில் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்திருப்பவர்கள் ஆவார்கள்.