states

img

ஹிஜாப் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என பி.யு.கல்லூரி ஒன்றில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என இந்து மாணவ, மாணவிகள் எதிர் போராட்டம் நடத்தினர்.  இதையடுத்து நடந்த போராட்டத்தால் கர்நாடகத்தில் பதற்றமான சூழல் உருவானது. 
இதற்கிடையே மாநில அரசின் பள்ளி கல்வித்துறை, மாணவர்கள் சீருடை தவிர மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வர தடை விதித்தது.

இதையடுத்து, இஸ்லாமிய மாணவிகள்  ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு செல்ல அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக 6 மாணவிகள் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியமும் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்துள்ளது.